மும்பை : வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து இந்திய அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் சிவம் துபே காயம் காரணமாக விலகி இருக்கிறார். டி20 போட்டிகளில் நடுவரிசையில் களம் இறங்கி அதிரடியாக ரன்கள் சேர்க்கும் சிவம் துபே, பந்து வீச்சில் குறைந்தபட்சம் இரண்டு ஓவர்களை வீசுவார்.
இதன் மூலம் இந்திய டி20 அணியின் முக்கிய வீரராக சிவம் துபே விளங்கி வந்தார். கடந்த ஐபிஎல் தொடரின் சிவம் துபே பிற்பகுதியில் சொதப்பினாலும் அவருக்கு டி20 உலக கோப்பையில் இடம் கிடைத்தது. 31 வயதான சிவம் துபே கடந்த இலங்கைக்கு எதிரான தொடரில் அதிகபட்சமாகவே 25 ரன்கள் தான் அடித்தார்.

இந்த சூழலில் சிவம் துபே தன்னுடைய இடத்தை உறுதி செய்து கொள்ள உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் களம் இறங்கினார். அண்மையில் நடைபெற்ற துலீப் கோப்பை தொடரில் இந்திய ஏ அணிக்காக விளையாடிய சிவம் துபே பேட்டிங்கில் 20 மற்றும் 14 ரன்கள் மட்டும் தான் சேர்த்தார்.
பந்துவீச்சில் 14 ரன்கள் விட்டு கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இந்த போட்டியின் போது சிவம் துபேக்கு காயம் ஏற்பட்டது. இந்த காயத்திலிருந்து துபே குணமடையவில்லை. இதனால் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து சிவம் துபே அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். சிவம் துபேக்கு பதிலாக மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா சேர்க்கப்பட்டிருக்கிறார்.
திறமை வாய்ந்த வீரராக கருதப்படும் திலக் வர்மாவுக்கு கடந்த சில நாட்களாக அணியில் இடம் கிடைக்கவில்லை. கடைசியாக அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற டி20 போட்டியில் விளையாடினார். இந்த சூழலில் திலக் வர்மாவுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற துலீப் கோப்பை தொடரில் கூட திலக் வர்மா சதம் விளாசினார். திலக் வருமா தற்போது பந்து வீசவும் கற்றுக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.