அனந்தபூர்: துலீப் டிராபி 2வது சுற்று போட்டியில் இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா டி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி வெளியேறியுள்ளார். ஏற்கனவே வங்கதேசம் அணிக்கு எதிரான தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் புறக்கணிக்கப்பட்டுள்ள நிலையில், இனி அவரால் இந்திய டெஸ்ட் அணிக்குள் இடம்பிடிக்கவே முடியாது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக 2வது டெஸ்ட் போட்டியுடன் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயர், ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாடி ஃபார்மை நிரூபிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டார். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஓய்வெடுக்க சென்றார்.

இதன் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் மீது தேர்வுக் குழுவினர் அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதுமட்டுமல்லாமல் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இருந்தும் ஸ்ரேயாஸ் ஐயர் வெளியேற்றப்பட்டார். இருந்தாலும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க தேர்வுக் குழு முடிவு செய்தது. அதன் காரணமாகவே இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்பட்டார்.
அதிலும் ஸ்ரேயாஸ் ஐயர் சொதப்பிய நிலையில், ஹோம் சீசன் தொடங்குவதற்கு முன்பாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு துலீப் டிராபியில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் இந்தியா டி அணியின் கேப்டனாகவும் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்பட்டார். முதல் சுற்றில் இந்தியா சி அணிக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் முதல் இன்னிங்ஸில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார்.
அதேபோல் 2வது இன்னிங்ஸில் அதிரடியாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 44 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதற்கு இது போதாது என்றே பார்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சீனியர் வீரர்களான விராட் கோலி, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்டோர் இந்திய அணிக்கு திரும்பியதால், வங்கதேச டெஸ்ட் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவில்லை.
இதனால் 2வது சுற்றுக்கான துலீப் டிராபி போட்டியில் விளையாட ஸ்ரேயாஸ் ஐயர் தயாரானார். இந்தியா ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா டி அணி களமிறங்கியது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி 290 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷாம்ஸ் முலானி 187 பந்துகளில் 3 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 89 ரன்கள் சேத்தார். தனுஷ் கோட்டியான் 53 ரன்கள் எடுத்து வெளியேறினார். இந்தியா டி அணி தரப்பில் ஹர்சித் ராணா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பின்னர் இந்தியா டி அணி தரப்பில் களமிறங்கிய அதர்வா தய்டே 4 ரன்களில் ஆட்டமிழக்க, உடனடியாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் களம் புகுந்தார். இந்த போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான கலீல் அஹ்மத் வேகத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால் இந்திய டி அணி 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் இனி இந்திய டெஸ்ட் அணி பக்கமே ஸ்ரேயாஸ் ஐயரால் வர முடியாது என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.