ஆன்டிகுவா : வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இதன்பின் இந்திய அணி தரப்பில் அளிக்கப்பட்டு வரும் சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை அணிவிப்பதற்காக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் இந்திய அணியின் ஓய்வறைக்கு வந்த வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய வங்கதேசம் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு கிட்டத்தட்ட முன்னேறியதாக பார்க்கப்படுகிறது.

இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் மற்றும் ஒரு விக்கெட்டை வீழ்த்திய ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின் இந்திய அணி வீரர்கள் ஓய்வறையில் கூடினர். சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை அறிவிக்கும் நடைமுறையை பயிற்சியாளர் திலீப் தொடங்கினார். இந்த பரிந்துரை பட்டியலில் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மா, அக்சர் படேல் ஆகியோர் இருந்தனர்.
இதன்பின் திலீப் பேசுகையில், கடந்த முறை போல் அல்லாமல் இம்முறை சிறப்பு விருந்தினர் வருகிறார். ரியல் லெஜண்ட், பயமின்றி பேட்டிங் செய்த ஜாம்பவான் வீரர் என்று திலீப் கூற, யார் அந்த சிறப்பு விருந்தினர் என்ற எதிர்பார்ப்பு வீரர்களுக்கும் எழுந்தது. திடீரென திலீப், அது வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ் என்று கூற, ஒட்டுமொத்த இந்திய வீரர்களும் மிரண்டே போயினர்.
உற்சாகத்தை சத்தத்தை எழுப்பிய இந்திய வீரர்கள், விவியன் ரிச்சர்ட்ஸ் வருவதை அறிந்து உடனடியாக எழுந்து நின்று கைகளை தட்டி வரவேற்பு அளித்தனர். சிறந்த ஃபீல்டருக்கான விருதை அளிக்க வெளிநாட்டு ஜாம்பவான் அழைக்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். விவியன் ரிச்சர்ட்ஸ் இந்திய அணி ஓய்வறைக்கு வந்ததும், விராட் கோலியை கட்டியணைத்து பாராட்டினார்.
இதன்பின் விவியன் ரிச்சர்ட்ஸ் பேசுகையில், இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. ஏற்கனவே வலிமையாக இருக்கும் வீரர்களிடம் இன்னும் சொல்ல வேண்டும் என்று தெரியவில்லை. இந்த ஓய்வறையில் நல்ல விஷயங்கள் நடந்து கொண்டு வருகிறது. ஒருவேளை டி20 உலகக்கோப்பையை வெஸ்ட் இண்டீஸ் அணி வெல்ல முடியாமல் போனால், எனது ஆதரவு இந்திய அணிக்கு தான். கரீபியனாக இதனை தான் சொல்வேன். ஆனால் இங்கு விளையாட வந்தது மகிழ்ச்சி.
மிகப்பெரிய விபத்திற்கு பின் ரிஷப் பண்ட் மீண்டும் வந்திருப்பது மகிழ்ச்சி. இல்லையென்றால், எதிர்காலத்தில் நீ செய்யப் போவதையும் காண முடியாமல் மிஸ் செய்திருப்போம். உங்களின் கிரிக்கெட்டை சுதந்திரமாக விளையாடுகிறீர்கள் என்று தெரிவித்தார். அப்போது ரிஷப் பண்ட் அவருக்கு அருகில் வந்து, சார்.. உங்களை ஒருமுறை கட்டிப்பிடித்து கொள்ளவா என்று கேட்க, தி பாக்கெட் ராக்கெட் என்று அடைமொழி கூறி ரிச்சர்ட்ஸ் பாராட்டினார்.
இதன்பின் சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை சூர்யகுமார் யாதவிற்கு அணிவித்த ரிச்சர்ட்ஸ், மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் இல்லையென்றால், உங்களுக்கு தான் என் ஆதரவு என்று தெரிவித்தார். இதன்பின் இந்திய அணி வீரர்கள் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.