சென்னை : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா தலைமையில் 16 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். இதில் t20 உலக கோப்பைக்கு பிறகு ஓய்வில் இருந்த பும்ரா தற்போது அணிக்கு திரும்பி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் டெஸ்ட் போட்டிக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு ரிஷப் பன்ட் தேர்வாகி இருக்கிறார்.
இந்த சூழலில் முஹமது சமி தற்போது காயத்திலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். இதன் காரணமாக அவர் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் முஹமது சிராஜ், பும்ரா ஆகியோர் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழலில் இந்திய அணியில் கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்களாக ஆகாஷ் தீப் மற்றும் யாஷ் தயால் ஆகியோரை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் தேர்வு செய்திருக்கிறார். இந்த நிலையில் 27 வயதான ஆகாஷ் தீப், துலீப் கோப்பை தொடரில் அபாரமாக செயல்பட்டு இருக்கிறார்.
இதனை பாராட்டி பேசி உள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, பெங்காலை சேர்ந்த ஆகாஷ் தீப் அதிவேகமாக முகமது சமி போல் பந்து வீசக்கூடிய வீரராக திகழ்வதாக கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், ஆகாஷ் தீப் இளமையான திறமை வாய்ந்த வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். எப்போது அவரிடம் பந்து சென்றாலும் நீண்ட நேரத்திற்கு ஒரே வேகத்தில் பந்து வீசக்கூடிய வீரராக திகழ்கிறார்.
அவர் முழு உடல் தகுதியுடன் இருக்கின்றார். ஆகாஷ் தீப் பெங்கால் அணிக்காக பல ஆண்டுகள் விளையாடி நான் பார்த்திருக்கிறேன். அவர் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை எடுப்பார். முஹமது சிராஜ், முஹமது ஷமி போல் அவரும் தொடர்ந்து வேகமாக வீசக்கூடிய வீரராக இருக்கிறார். 140 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் பந்து வீசும் திறன் அவரிடம் இருக்கிறது.
நிச்சயமாக ஆகாஷ் தீப்பை உற்று கவனியுங்கள் என்று கங்குலி கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய கங்குலி இந்திய சூழலில் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் தான் இருக்கும். சென்னை ஆடுகளத்தில் குறிப்பாக பந்தில் பவுன்ஸ் நன்றாக இருக்கும். இதனை பயன்படுத்திக்கொண்டு அஸ்வின், ஜடேஜா, அக்சர் பட்டேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக செயல்படுவார்கள். உலகின் தலைசிறந்த நான்கு சுழற் பந்து வீச்சாளர்களும் ஒரே அணியில் தற்போது இருக்கிறார்கள்.
எனவே பேட்டிங் செய்யும் அணிக்கு அது சுலபமாக இருக்காது. இந்தியாவில் நீங்கள் விளையாடுகிறீர்கள் என்றால் சுழற் பந்துவீச்சாளரின் ஆதிக்கம் போட்டியில் எப்போதுமே இருக்கும். அது மட்டுமில்லாமல் இந்தியா தற்போது சொந்த மண்ணில் சிறந்த அணியாக விளங்குகிறது என்று கங்குலி பாராட்டியுள்ளார். ஆகாஷ் தீப் மற்றும் யாஸ் தயால் ஆகியோர் கூடுதலாக அணியில் இருந்தாலும் அவர்கள் பிளேயிங் லெவனில் இடம்பெறுவது மிகவும் கடினமாகும்.
இதில் யாரேனும் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் பின் யாஷ் தயால் அல்லது ஆகாஷ் தீப் இருவரில் யாரேனும் ஒருவர் பிளேயிங் லெவனில் இடம் பெற வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமில்லாமல் வெளிநாட்டு தொடர் என்றால் அதில் இந்தியா மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து களமிறங்கும். ஆனால் உள்நாட்டில் போட்டிகள் நடைபெறுவதால் இந்தியா 3 அல்லது 4 சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து கூட விளையாடலாம்.
ஆடுகளம் மிகவும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் பும்ராவை மட்டுமே வைத்துக் கொண்டு நான்கு சுழற்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடும் திட்டத்தை கூட இந்தியா எடுக்கலாம். கம்பீர் இப்படி வித்தியாசமாக யோசிக்க கூடியவர் என்பதால் இப்படி நடந்தாலும் ரசிகர்கள் ஆச்சரியப்பட வேண்டாம்.