மும்பை: வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணியில் இளம் ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த டி20 தொடரில் நிதிஷ் ரெட்டி இந்திய அணிக்காக அறிமுகமாகும் பட்சத்தில், அது ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனுக்கு மிகப்பெரிய சிக்கலை உருவாக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
கடந்த ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்காக களமிறங்கிய இளம் ஆல்ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டி 11 இன்னிங்ஸ்களில் 303 ரன்கள் விளாசியதோடு, பவுலிங்கிலும் பட்டையை கிளப்பினார். இதனைத் தொடர்ந்து உடனடியாக ஜிம்பாப்வே டி20 தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், காயம் காரணமாக கடைசி நேரத்தில் பயணிக்க முடியாமல் போனது.

இதன்பின் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் நிதிஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் நிதிஷ் குமார் ரெட்டியை களமிறக்க பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் இருவரும் ஆர்வமாக இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது.
ஏனென்றால் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே மட்டுமே இந்திய அணியில் உள்ளனர். இதில் சிவம் துபேவின் பவுலிங்கில் வேகம் மிகவும் குறைவு என்பதால், அவரை மீடியம் ஃபாஸ்ட் பவுலர் என்றே கூற முடியும். இதனால் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரரை தயார் செய்வதில் இந்திய அணி நிர்வாகம் தீவிரமாக உள்ளது.
இதனால் நிதிஷ் குமார் ரெட்டிக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கட்டாயம் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் நிதிஷ் குமார் ரெட்டி இந்திய அணிக்கு அறிமுகமாவது ஐதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறனுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். ஏனென்றால் இந்திய அணிக்காக அவர் அறிமுகமாகவில்லை என்றால், அவரை அன்-கேப்ட் வீரராக ரூ.4 கோடிக்கு தக்க வைக்க முடியும்.
ஒருவேளை நிதிஷ் குமார் ரெட்டி கூடுதல் ஊதியம் கேட்டாலும், சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கான சலுகை தொகை மற்றும் விளம்பர ஒப்பந்தங்கள் மூலமாக எளிதாக சரிக்கட்ட முடியும். ஆனால் இந்திய அணிக்காக நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகமாகிவிட்டால், அவரை ரூ.11 கோடிக்கு குறையாமல் ஊதியம் கொடுத்து தக்க வேண்டிய நிலைக்கு காவ்யா மாறன் தள்ளப்படுவார்.
இதனால் நிதிஷ் குமார் ரெட்டி அறிமுகம் செய்யப்படுகிறாரா என்பதை காவ்யா மாறன் கூர்ந்து கவனித்து வருவதாக கூறப்படுகிறது. ஐதராபாத் அணியை பொறுத்த வரை கேப்டன் பேட் கம்மின்ஸ், அபிஷேக் சர்மா, ட்ராவிஸ் ஹெட் மற்றும் கிளாசன் ஆகிய 4 பேரையும் தக்க வைப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதனால் அன்-கேப்ட் வீரராக நிதிஷ் குமார் ரெட்டி தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.