சென்னை: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில், வங்கதேச அணியின் இளம் வீரர்கள் குறித்து முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணியை எச்சரித்து இருக்கிறார். வங்கதேச அணியில் இருக்கும் இளம் வீரர்கள் எதிர் அணியை பார்த்து பயப்படுவதில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இந்தியா வரும் வங்கதேச அணி இதற்கு முன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி, அந்த இரண்டு போட்டிகளிலும் வென்று இருக்கிறது. இதற்கு முன் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வங்கதேச அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று இருக்கும் வங்கதேச அணி, அடுத்து இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளது.

இதற்கு முன் நடந்த இந்தியா - வங்கதேச டெஸ்ட் தொடர்களைப் போல இந்த தொடரை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது என்ன சுனில் கவாஸ்கர் சுட்டிக் காட்டி இருக்கிறார். இது குறித்து அவர் "தி மிட் டே" என்ற தளத்தில் எழுதி உள்ள கட்டுரையில், "பாகிஸ்தான் மண்ணில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக வங்கதேச அணி இரண்டு போட்டிகளில் விளையாடி, இரண்டிலும் வெற்றி பெற்று உள்ளது. இதன் மூலம் கிரிக்கெட்டில் தாங்கள் ஒரு ஆற்றல் மிக்க அணி என்பதை வங்கதேசம் வெளிப்படுத்தி உள்ளது." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும், "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வங்கதேசத்திற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட போதும் அவர்கள் சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்கள். அவர்கள் அணியில் சில சிறந்த வீரர்கள் இருக்கிறார்கள். தாங்கள் சர்வதேச கிரிக்கெட்டுக்கு புதியவர்கள் என்பதை வெளிப்படுத்தும் குணம் இல்லாத, பயமில்லாத நம்பிக்கை தரும் இளம் வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்." என்று கவாஸ்கர் கூறி இருக்கிறார்.
"இனி வங்கதேச அணிக்கு எதிராக ஆடும் எந்த ஒரு அணியும் தங்கள் தற்காப்பை கைவிட்டு விட்டு எளிதாக அவர்களை வீழ்த்தலாம் என நினைக்க முடியாது. அப்படி செய்தால் பாகிஸ்தான் அணியை போலவே அவர்களும் வீழ்த்தப்படுவார்கள். எனவே, இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் நிச்சயம் கவனிக்கத்தக்க ஒரு தொடராக இருக்கும்." என்று சுனில் கவாஸ்கர் கூறி இருக்கிறார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாகவே இந்த தொடர் நடைபெற உள்ளது. இதில் பெரும் வெற்றியானது இந்திய அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகவே இருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டும் என்றால் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவது அவசியமாகும்.
வங்கதேச டெஸ்ட் தொடருக்கு பின் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. அந்த இரண்டு தொடரும் சற்று கடினமாக இருக்கும் என்பதால் அதில் சில தோல்விகள் ஏற்படலாம். அதனால், வங்கதேச அணிக்கு எதிராக இரண்டு போட்டிகளிலும் வென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.