ஐதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 297 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் 8 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 111 ரன்களை விளாசினார்.
இதன் மூலமாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல்முறையாக சதம் விளாசிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார். கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைக்காமல் போராடி வந்த சஞ்சு சாம்சனுக்கு, இந்த சதம் அவரின் இடத்தை உறுதி செய்துள்ளதாக பார்க்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சஞ்சு சாம்சன் பேசுகையில், ஓய்வறையின் எனர்ஜி எப்போதும் அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும். அதேபோல் இந்திய அணி வீரர்கள் எனக்காக அதிகமான மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடியது எனக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
சில நேரங்களில் மோசமாக விளையாடி ஆட்டமிழக்கும் போது, விரக்தியாக இருக்கும். ஏனென்றால் நம்மால் இன்னும் நல்ல இன்னிங்ஸை விளையாட முடியும் என்ற எண்ணம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் ஏராளமான போட்டிகளில் விளையாடி, ஏராளமான அனுபவத்துடன் இருப்பதால், அழுத்தத்தையும் விரக்தியையும் எப்படி கையாள வேண்டும் என்பது தெரியும்.
தோல்வியை எப்படி அணுக வேண்டும் என்பதை உணர்ந்துள்ளேன். ஏனென்றால் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் அதிக முறை தோல்வியை சந்தித்துள்ளேன். இதனால் வழக்கம் போல் நமது பணியை செய்தாலே, பாசிட்டிவான விஷயங்களை நம்மை பின் தொடரும். இந்திய அணிக்காக விளையாடும் போது, எப்போதும் அழுத்தம் இருக்க தான் செய்யும்.
அதனைவிடவும் நமது திறமையை நிரூபிக்க வேண்டும், மக்களுக்கு சிறந்த கிரிக்கெட்டை காட்ட வேண்டும் என்பதும் மனதில் இருக்கும். இருந்தாலும் ஒவ்வொரு போட்டியிலும் ஒரு பந்தின் மீது தான் கவனம் வைப்பேன். இந்திய அணியின் கேப்டன் மற்றும் பயிற்சியாளர் என் மீது நம்பிக்கை வைத்து தொடர்ந்து வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். தோல்வியை பற்றி கவலைப்பட தேவையில்லை என்று ஆதரவாக நின்றுள்ளார்கள்.
சொல்லில் மட்டுமல்லாமல் செயல்பாட்டிலும் காட்டியுள்ளனர். ஏனென்றால் இலங்கை டி20 தொடரில் 2 போட்டிகளிலும் டக் அவுட்டாகி வெளியேறினேன். அதன்பின் டக் அவுட்டானதை நினைத்து கொண்டே, கேரளாவுக்கு சென்று மீண்டும் பயிற்சியை தொடங்கினேன். இறுதியாக மீண்டும் இந்திய அணியில் இருக்கிறேன்.
ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் என்பது நீண்ட நாட்களாக எனது மனதில் இருக்கும் விஷயம் தான். எனது ஆலோசகர் எப்போதும் நீ ஒரே ஓவரில் 5 சிக்சர்களை விளாச வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். இதனால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக 5 சிக்சர்கள் விளாச முயற்சித்து வந்தேன். அது இன்று நடந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.