கொழும்பு : இந்திய கிரிக்கெட் அணியில் பெரும் போராட்டத்துக்கு பின் இடம் பெற்ற சூர்யகுமார் யாதவ் மீது ஒரு விமர்சனம் உள்ளது.
அவர் உள்ளூர் ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடரில் தன் அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை துவம்சம் செய்ததை பார்த்து ரசிகர்கள் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்தே ஆக வேண்டும் என சமூக ஊடகங்களில் போராட்டம் நடத்திய பின்தான் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது.

அவரும் இந்திய டி20 அணியில் தவிர்க்க முடியாத வீரராக மாறி இருக்கிறார். ஏபி டிவில்லியர்ஸ்-க்கு பிறகு பேட்டை இஷ்டத்துக்கு சுழற்றி 360 டிகிரி திசையிலும் பந்தை அடிக்கும் திறன் பெற்ற வீரராக இருக்கிறார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் இதுவரை அவர் தன்னை நிரூபிக்கவில்லை.
ஒரு கட்டத்தில் அவருக்கு ஒருநாள் போட்டிகள் சரி வராது என்ற முடிவுக்கே வந்த இந்திய அணி, அவரை மாற்று வீரராக மட்டுமே ஒருநாள் போட்டிகளில் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில், உலகக்கோப்பைக்கு முன் அவரை நிரூபிக்க ஆசய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அவர் ஆறாம் நிலை பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். இந்திய அணி வங்கதேசம் நிர்ணயித்த 266 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிக் கொண்டிருந்த போது 94 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்து இந்திய அணி தவித்து வந்த போது சூர்யகுமார் யாதவ் களமிறங்கினார்.
தன்னை நிரூபிக்க அவருக்கு சரியான வாய்ப்பு கிடைத்தது. கடைசி வரை நின்று தன் அதிரடி ஆட்டத்தால் அவர் இந்திய அணியை வெற்றி பெறச் செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. துவக்கத்தில் நிதான ஆட்டத்தை கடைபிடித்த அவர் ஒரு கட்டத்தில் ரன் சேர்க்க முடியவில்லை என நினைத்தாரோ என்னவோ, சுழற் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் ஆடியே தீருவேன் என பிடிவாதம் பிடித்து அடிக்க முயன்றார். ஆனால், அவரது மனநிலையை சரியாக புரிந்து கொண்ட அனுபவ சுழற் பந்துவீச்சாளர் ஷகிப் அல் ஹசன் ஸ்டம்ப்புக்கு திரும்பும் வகையில் பந்து வீசி அவரை பவுல்டு அவுட் செய்தார். இதை அவர் எதிர்பார்க்கவில்லை.
டி20 போட்டிகளில் ஆடுவது போல ஒருநாள் போட்டிகளில் அவர் ஆடுவதில்லை என்ற விமர்சனத்தை உடைக்கத் தான் அவர் ஸ்வீப் ஷாட் ஆட முயன்றார் என்பதை முன்னாள் வீரர்கள் பலர் குறிப்பிட்டனர். அவர் விரக்தி மனநிலையில் இப்படி இருப்பதை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என ஆஸ்திரேலிய ஜாம்பவான் மாத்யூ ஹைடனும் குறிப்பிட்டார்.
உலகக்கோப்பையை மனதில் கொண்டு இனியாவது விமர்சனங்களை கண்டு கொள்ளாமல் தன் விரக்தி மனநிலையில் இருந்து வெளியே வந்து சூர்யகுமார் சூழ்நிலைக்கு ஏற்ப இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.