மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க வேண்டி சூர்யகுமார் யாதவ் உள்ளூர் தொடரான புச்சி பாபு தொடரில் விளையாடினார். அந்த தொடரில் தமிழ்நாடு அணியான டிஎன்சிஏ 11 அணிக்கு எதிரான போட்டியில் அவர் காயம் அடைந்தார். அதனால், அவரது டெஸ்ட் அணி வாய்ப்பு கேள்விக் குறியாக மாறி உள்ளது. அவர் விரைவில் பிசிசிஐ கண்காணிப்பில் செல்ல வாய்ப்பு இருக்கிறது.
அதனால், அடுத்து நடைபெற உள்ள துலீப் டிராபி உள்ளூர் தொடரில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற வேண்டும் என்ற சூர்யகுமார் யாதவின் ஆசைக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டு இருக்கிறது. இந்திய அணி அடுத்து வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது.

அதைத் தொடர்ந்து நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இந்த நிலையில், உள்ளூர் டெஸ்ட் தொடர்களான புச்சி பாபு மற்றும் துலீப் டிராபி தொடர்களில் விளையாடி, அதிக ரன்கள் குவித்து இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று விடலாம் என கனவு கண்டார் சூர்யகுமார் யாதவ். அவரை டி20 பேட்ஸ்மேன் என பிசிசிஐ ஒதுக்கி வைத்துள்ளது. அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என முழு மூச்சுடன் இறங்கினார்.
அதற்காகவே மிகவும் சிறிய தொடரான புச்சி பாபு தொடரில் மும்பை அணிக்காக விளையாடினார். தான் பங்கேற்ற முதல் போட்டியில் அவர் சரியாக ரன் குவிக்கவில்லை. இந்த நிலையில், டிஎன்சிஏ அணிக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் பேட்டிங் செய்யவே களமிறங்கவில்லை. அவருக்கு ஃபீல்டிங் செய்த போது விரல்களில் காயம் ஏற்பட்டதால் பேட்டிங் செய்ய வரவில்லை.
அடுத்து நடைபெற உள்ள துலீப் டிராபி டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்றால் இந்திய டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்காது. மேலும், அவர் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருக்கும் நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டால் பிசிசிஐ நிச்சயமாக அவரை உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்காது எனவும் கூறப்படுகிறது.
பிசிசிஐ அவரை டெஸ்ட் வீரராக பார்க்காததால் அவர் சிறிய காயத்துடன் டெஸ்ட் தொடர்களில் ஆடி அதை பெரிதாக்கிக் கொள்ளக்கூடும் என்பதால் அவரை துலீப் டிராபி தொடரில் இருந்து பிசிசிஐ நீக்கவும் வாய்ப்புள்ளது. மேலும், அவரது காயம் குறித்து தேசிய கிரிக்கெட் அகாடமி பரிசோதனை செய்யும் எனவும் கூறப்படுகிறது.
எனவே, சூர்யகுமார் யாதவின் டெஸ்ட் அணி ஆசை கிட்டத்தட்ட முடிவுக்கு வந்திருக்கிறது. அவரைப் போலவே ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சர்ஃபராஸ் கான் டெஸ்ட் அணியில் தங்கள் இடத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள வேண்டும் என புச்சி பாபு தொடரில் மும்பை அணியில் இடம் பெற்று ஆடி வந்தனர். அவர்களும் டிஎன்சிஏ அணிக்கு எதிரான போட்டியில் சரியாக ரன் சேர்க்கவில்லை. இரண்டு இன்னிங்ஸ்களில் ஸ்ரேயாஸ் 2 மற்றும் 22 ரன்கள் மட்டும் சேர்த்தார். சர்ஃபராஸ் கான் 6 மற்றும் 0 ரன்கள் மட்டும் எடுத்தார். அவர்களது டெஸ்ட் வாய்ப்பும் கேள்விக் குறியாகி உள்ளது.