ஹைதராபாத்: வங்கதேச அணியின் மூத்த வீரர் மஹ்மதுல்லா நேற்று ஹைதராபாத்தில் நடந்த டி20 போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். வங்கதேசம் நேற்று மிக மோசமாக விளையாடிய நிலையில், அவர் வெறும் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து சோகத்துடன் வெளியேறினார். அப்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் செய்த செயல் இணையத்தில்ரசிகர்கள் இடையே வேகமாக பரவி வருகிறது.
வங்கதேச அணிக்காக நீண்ட காலமாக கிரிக்கெட் விளையாடி வருகிறார் மஹ்மதுல்லா. அவர் உலகிலேயே அதிக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தார். நேற்று இந்திய அணிக்கு எதிராக அவர் ஆடியது அவரது 141 வது சர்வதேச டி20 போட்டி ஆகும். இதன் மூலம் அயர்லாந்து வீரர் ஜார்ஜ் டாக்ரேல் உடன் மூன்றாவது இடத்தை பகிர்ந்து கொண்டார்.

அதிக சர்வதேச டி20 போட்டிகளில் ஆடிய வீரர்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் ரோஹித் சர்மா (159 போட்டிகள்), அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங் (147 போட்டிகள்) உள்ளனர். மேலும், வங்கதேச அணிக்காக 17 ஆண்டுகள் 41 நாட்கள் விளையாடி இருக்கிறார் மஹ்மதுல்லா. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நீண்ட காலம் விளையாடிய வீரர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
இந்த பட்டியலில் முதல் இடத்தில் வங்கதேச வீரர் ஷகிப் அல் ஹசன் (17 ஆண்டுகள் 209 நாட்கள்), இரண்டாவது இடத்தில் ஜிம்பாப்வேவின் சீன் வில்லியம்ஸ் (17 ஆண்டுகள் 166 நாட்கள்) உள்ளனர். இந்த நிலையில் இந்தியா உடனான மூன்றாவது டி20 போட்டியே தனது கடைசி சர்வதேச டி20 போட்டி என அறிவித்து இருந்தார் மஹ்மதுல்லா.
அவர் சில ஆண்டுகளாகவே டி20 போட்டிகளில் மோசமாக விளையாடி வந்த நிலையில் நேற்றைய போட்டியில், தனது கடைசி டி20 இன்னிங்ஸில் வெறும் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 297 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வங்கதேச அணி இந்திய அணிக்கு ஈடு கொடுக்க முடியாமல் விக்கெட்களை இழந்து வந்தது.
இந்த நிலையில், மூத்த வீரரான மஹ்மதுல்லா அணிக்கு உதவ முடியாமல் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து சோகத்துடன் வெளியேறினார். அப்போது இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஓடி வந்து அவரது முதுகில் தட்டிக் கொடுத்து அவருக்கு விடை தந்தார். இந்த காட்சி வங்கதேச ரசிகர்களுக்கு நெகழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. இந்த போட்டியில் வங்கதேச அணி 164 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மஹ்மதுல்லா இந்தியாவுக்கு எதிரான இந்த தொடரில் மொத்தம் 50 ரன்கள் மட்டுமே எடுத்தார். முதல் போட்டியில் 1 ரன்னும், இரண்டாவது போட்டியில் 41 ரன்களும் எடுத்து இருந்தார்.