மும்பை : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் வரும் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதமாக கடந்த 5ஆம் தேதி துலீப் கோப்பைத் தொடர் நடத்தப்பட்டது.
இதில் இந்திய அணியின் பல சீனியர் வீரர்கள் பங்கு பெற்றார்கள். அப்போது இந்திய டி20 அணியின் கேப்டனான சூரியகுமார் யாதவும் களமிறங்கினார். இந்த போட்டியில் சூரிய குமார், பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இதனால் சூரிய குமார் யாதவ் ஒரு மாதத்திற்கு எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார் என்ற செய்திகள் வெளியானது. இதன் காரணமாக வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரிலும் சூரியகுமார் களமிறங்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்பார்த்ததை விட சூரியகுமார் யாதவ் காயம் குணமடைந்து விட்டதால் அவர் வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடரில் பங்கு பெறுவது உறுதியாகிவிட்டது.
அது மட்டுமல்லாமல் நாளை தொடங்கும் துலீப் கோப்பை தொடரின் மூன்றாவது சுற்று ஆட்டத்தில் சூரியகுமார் யாதவ் இடம்பெறுவார் என்று செய்திகள் வெளியாகி உள்ளது. எனினும் சூரியகுமார் டெஸ்ட் கிரிக்கெட்டை மறந்து விட்டு ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக ஏற்கனவே பல வீரர்கள் வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் சூரியகுமார் யாதவ் 34 வயது ஆகிவிட்டதால், அவர் இனி டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்தாமல் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
சூரியகுமார் யாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. 37 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி மொத்தமாகவே அவர் 773 ரன்கள் தான் அடித்து இருக்கிறார். இதில் அதிகபட்சமாக அவர் அடித்த ஸ்கோர். 72 இதில் 4 அரை சதம் அடங்கும். ஆனால் டி20 கிரிக்கெட் சூரியகுமார் அபாரமாக விளையாடி நான்கு சதம், 20 அரை சதம் என 71 போட்டிகளில் 2432 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் அவருடைய சராசரி 42 ஆகும். நிலைமை இப்படி இருக்க சூரிய குமார் யாதவ் ஒரு நாள் கிரிக்கெட்டில் இடம் பிடித்தால் இந்தியாவுக்கு ஒரு நல்ல ஃபினிஷர் கிடைப்பார். ஆனால் டி20 போட்டிகளில் ஏற்படுத்திய மேஜிக்கை சூரியகுமார் யாதவால் ஒருநாள் கிரிக்கெட்டில் கொண்டுவர முடியவில்லை. இதனால் டெஸ்ட் போட்டியை சூரிய குமார் மறந்து விட்டு ஒரு நாள் கிரிக்கெட்டில் முழு கவனம் செலுத்த வேண்டும். சூரிய குமாருக்கு தற்போது 34 வயது ஆகிவிட்டதால், அவருடைய உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றார்.
இதேபோன்று இந்திய அணி வீரர்கள் டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 என மூன்று விதமான கிரிக்கெட் வடிவங்களிலும் விளையாட வேண்டும் என ஆசைப்படுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு எது சரியாக வருமோ அதில் மட்டுமே கவனம் செலுத்தினால், இன்னும் அதில் பெரிய உயரத்தை தொட முடியும். இப்படி ஒரு சூழலில் சர்பராஸ் கான் போன்ற வீரர்களுக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். ஒரே விதமான வீரர்கள் அனைத்து போட்டிகளிலும் இடம் பெறுவதால் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.