IND vs BAN: சாம்சனுக்கு முன் சிவம் துபேவை களமிறக்கியது ஏன்? மீண்டும் அதையே செய்வோம்- சூர்யகுமார்
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்து வீசியது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி பேட்டிங்கில் மூன்றாவது வீரராக சிவம் துபேவை களம் இறக்கியது.
மேலும் சஞ்சு சாம்சனுக்கு இன்று ஆட்டத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த நிலையில் போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள சூரியகுமார் யாதவ் ஆடுகளும் தோய்வாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், இந்த தொடரில் நாங்கள் அதிக அளவு முதலில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கவில்லை. அதுவும் சூப்பர் ஃபோர் போன்ற முக்கியமான ஆட்டங்களில் முதலில் பேட்டிங் செய்து பிறகு அதனை தற்காத்துக் கொள்வது என்பது மிகவும் முக்கியம். தற்போது அந்த வாய்ப்பு எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
ஆடுகளம் இரண்டாவது இன்னிங்ஸில் தோய்வாக மாறிவிடுகிறது. அதுவும் பனிப்பொழிவும் இன்று ஏற்படவில்லை. இதனால் பேட்டிங் செய்வது கடினம் என்று நினைக்கின்றேன். வங்கதேச அணியில் இடது கை சுழற் பந்துவீச்சாளர் மற்றும் லெக் ஸ்பின்னர் ஆகியோர் இருந்தனர்.
அவர்களை எதிர்கொள்ள சிவம் துபே தான் சரியான நபராக இருப்பார் என்று நினைத்தோம். அதுவும் ஏழாவது ஓவரிலிருந்து 15ஆவது ஓவர் வரை அவர் களத்திற்குள் வந்தால் நிச்சயம் ரன் குவிக்கும் வேகம் அதிகமாகும். அதை நினைத்து தான் நாங்கள் அவரை களம் இறக்கினோம்.
ஆனால் எதிர்பார்த்தபடி அந்த திட்டம் பலன் அளிக்கவில்லை. ஆனால் நிச்சயம் நாங்கள் மீண்டும் அதையே செய்வோம். இன்றைய ஆட்டத்தில் பவுண்டரி அருகே மைதானம் சரியாக இல்லை. இதனால் பந்து மெதுவாக தான் பவுண்டரி கோட்டிற்கு சென்றது. அது மட்டும் வேகமாக இருந்திருந்தால், நாங்கள் இன்னும் 180 அல்லது 185 ரன்கள் இலக்கை நிர்ணயித்திருப்போம். பந்துவீச்சில் 12 முதல் 14 ஓவர் வரை நாம் நல்ல ஓவராக வீசினால் எந்த இலக்கை வேண்டுமானாலும் நம்மால் தற்காத்துக் கொள்ள முடியும் என்று சூரிய குமார் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications