மும்பை : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது. இதன் மூலம் சர்வதேச டி 20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஒன்பது போட்டிகளில் இந்தியா வென்று இருக்கிறது.
இந்த போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடினாலும், மிகப்பெரிய சரிவை ஆரம்பத்தில் கண்டது. தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன், அபிஷேக் ஷர்மா மற்றும் கேப்டன் சூரியகுமார் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி 41 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சூரியகுமார் யாதவ், இதுபோன்ற ஒரு சூழல் உருவாக வேண்டும் என்று தாம் நினைத்ததாக கூறி பேசியிருப்பது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், என்னுடைய பேட்ஸ்மேன்கள் குறிப்பாக ஐந்து, ஆறு மற்றும் ஏழாவது இடத்தில் இருக்கும் நடுவரிசை வீரர்கள் இதுபோன்ற சூழலில் எப்படி விளையாட வேண்டும் என்பதை பார்க்க நினைத்தேன்.
இதுபோன்ற வாய்ப்பை ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ஆகியோர் சிறப்பாக செயல்படுத்தி கண்டு மகிழ்ச்சி கொண்டேன். நான் எவ்வாறு நினைத்தேனோ அதேபோல் இருவரும் பேட்டிங் செய்து ரன் குவித்தார்கள். களத்தில் நாம் சென்று யோசிக்காமல் நாம் நினைப்பதை வெளி காட்ட வேண்டும். நான் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். வலைப்பயிற்சியில் எப்படி விளையாடுகிறீர்களோ, அதே போல் களத்திலும் விளையாடுங்கள்.
ஐபிஎல் தொடரில் நீங்கள் எப்படி இருந்தீர்களோ, அதேபோல் இருங்கள். வெறும் ஜெர்சி மட்டும்தான் மாறுகிறது தவிர உங்களுடைய பணி அதே தான் என்று நான் அடிக்கடி கூறுவேன். இதைப் போன்று பவுலர்களும் பல சூழ்நிலைகளில் எவ்வாறு விளையாடுகிறார்கள் என்பதை நான் பார்க்க ஆசை பட்டேன். கடினமான சூழ்நிலைகளில் பவுலர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பார்க்க நினைத்தேன்.
எதற்காக தான் ஹர்திக் பாண்டியாவையும் வாஷிங்டன் சுந்தரையும் நான் சில நேரம் பயன்படுத்தவில்லை. மற்ற வீரர்கள் எவ்வாறு பவுலிங்கில் செயல்படுகிறார்கள் என்று பார்க்க நினைத்தேன்.மற்ற வீரர்களின் செயல்பாடு மகிழ்ச்சி அளித்தது. இன்று நிதீஷ் குமார் நாள். அதற்காக தான் அவருக்காக நான் அதிக வாய்ப்புகளை கொடுத்தேன். இதன் மூலம் அவர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நினைத்ததாக சூரியகுமார் யாதவ் கூறினார்.