சென்னை: இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப் ஒரு செலபிரிட்டி சூப்பர்ஸ்டார் என்று நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் பாராட்டியுள்ளார். அதேபோல் ஸ்லிப் ஃபீல்டிங்கில் சிறந்து விளங்கிய கேஎல் ராகுல் இடத்திற்கு கொண்டு வரப்பட்ட ஜெய்ஸ்வாலின் ஃபீல்டிங் செயல்பாடுகளை வியப்புக்குரியதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பொறுப்புக்கு வந்த போதும் கூட, முன்னாள் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் குழுவில் இருந்த ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலீப்பிற்கு மட்டும் மீண்டும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இதற்கு ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் செயல்பாடுகளும், அவரது வெளிப்படையான பாராட்டுகளும் முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.

குறிப்பாக ஒவ்வொரு கிரிக்கெட் தொடர் முடிவடைந்த பின்னரும் சிறந்த ஃபீல்டருக்கான பதக்கத்தை ஒரு வீரருக்கு வழங்கி வந்தது பலராலும் பாராட்டப்பட்டது. இது இந்திய வீரர்களிடையே ஃபீல்டிங்கில் போட்டி ஏற்படுத்தி உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு ஃபீல்டிங்கும் முக்கிய காரணமாக அமைந்தது.
ஏனென்றால் 2வது இன்னிங்ஸில் தொடக்க வீரர் ஜாகீர் ஹசனுக்கு ஜெய்ஸ்வால் பிடித்த கேட்ச் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் ஷத்மான் இஸ்லாமிற்கு சுப்மன் கில்லும், முஷ்ஃபிகுர் ரஹீமிற்கு கேஎல் ராகுலும் பிடித்த கேட்ச்கள் அபாரமாக இருந்தது. அதேபோல் பவுலர்கள் அனைவரும் ஃபீல்டிங்கில் கூடுதல் திறனை வெளிப்படுத்தினர்.
குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மா பவுண்டரிக்கு சென்ற பந்தை தாவிப் பிடித்த ரன் அவுட் அடிக்க முயற்சித்த காட்சிகளை அதிகப்படியாக பார்க்க முடியாது. இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசுகையில், டி திலீப் எங்களின் செலிபிரிட்டி ஃபீல்டிங் பயிற்சியாளர் மற்றும் சூப்பர் ஸ்டார் என்று சொல்வேன். கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியின் ஸ்லிப் கேட்சிங் முன்னேற்றம் அடைந்துள்ளது.
ஸ்லிப் கேட்சிங் நாம் நினைப்பதை போல் எளிதான விஷயமல்ல. கண் சிமிட்டும் நொடியில் நமது உடல், கைகள் மற்றும் மூளை ஆகிய பாலுக்கு ஏற்றபடி செயல்பட வேண்டும். இந்திய அணியின் இளம் வீரரான ஜெய்ஸ்வால் சிறந்த ஃபீல்டராக உருவாகியுள்ளார். 2வது ஸ்லிப் திசையில் கேஎல் ராகுல் மிகச்சிறப்பாக செயல்பட்டு வந்தார். அவரது இடத்திற்கு ஜெய்ஸ்வால் கொண்டு வரப்பட்டார்.
அது இந்திய அணிக்கு கூடுதல் சாதகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் ஷார்ட் லெக் திசையில் ஜெய்ஸ்வால் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இதற்கான முழு பாராட்டையும் டி திலீப்பிற்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக கம்பீரின் முடிவு சரியானதாக அமைந்திருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.