டெல்லி : வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதை அடுத்து ஐசிசி t20 தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் முன்னேற்றத்தை கண்டு இருக்கிறார்கள். குறிப்பாக இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஆர்ஸ்திப் சிங் அபாரமாக செயல்பட்டு 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஆர்ஸ்தீப் சிங், ஐசிசி t20 பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் எட்டு இடங்கள் முன்னேறி டாப் 10க்குள் நுழைந்து இருக்கிறார். தற்போது ஆர்ஸ்தீப் எட்டாவது இடத்தில் 642 புள்ளிகள் பெற்று இருக்கிறார். இதன் மூலம் பௌலர்களுக்கான டாப் 10 வரிசையில் இடம் பெற்றிருக்கும் ஒரே இந்தியர் என்ற பெருமை .
ஆர்ஸ்தீப் சிங்குக்கு கிடைத்திருக்கிறது.

அது மட்டும் இல்லாமல் வாஷிங்டன் சுந்தர் 4 இடங்கள் முன்னேறி 35 வது இடத்தை பிடித்திருக்கிறார். பவுலர்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஆதில் ரசித் முதலிடத்தில் இருக்கிறார். வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா 39 ரன்கள் விளாசினார். இதன் மூலம் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஏழு இடங்கள் முன்னேறி 60வது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் பந்துவீச்சில் ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட்டை வீழ்த்தியதை அடுத்து ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா மூன்றாவது இடத்தில் உள்ளார். பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் தொடர்ந்து முதலிடத்தில் இந்திய வீரர் சூரியகுமார் யாதவ் இரண்டாவது இடத்திலும் இங்கிலாந்து வீரர் ஃபில் சால்ட் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
இதைப் போன்று வங்கதேச தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் ஜெய்ஸ்வால் ஒரு இடம் சரிந்து தற்போது ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். ருதுராஜ் தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் உள்ளார். இந்த நிலையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது டி20 போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால்,அடுத்த புதன்கிழமை தரவரிசையில் இந்திய வீரர்கள் இன்னும் உச்சத்தை தொடுவார்கள்.