நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்தியா கோப்பை வெல்லும் என ரசிகர்கள் அதிக அளவில் நம்புகிறார்களா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. அதற்கு காரணம், கடந்த 2022 டி20 உலக கோப்பை, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை என கடந்த ஒன்றரை ஆண்டு இடைவெளியில் நடந்த மூன்று உலகக் கோப்பைகளில் இந்திய அணி அரை இறுதி அல்லது இறுதிப் போட்டி வரை முன்னேறி தோல்வி அடைந்து இருந்ததுதான்.
அந்த மூன்று தொடரிலும் இந்திய அணி மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்திய அணிதான் உலகக்கோப்பை வெல்லும் என சமூக வலைதளங்களில் அதிக அளவில் பகிர்ந்து வந்தனர். ஆனால், தற்போது 2024 டி20 உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லை. பலரும் மீண்டும் எங்களை ஏமாற்றி விடாதீர்கள் என்ற மீம்ஸ்களை வெளியிட்டு கடந்த கால தோல்விகளை சுட்டிக்காட்டி வருகிறார்கள்.

2022 டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி ஆடியது. அப்போது அரை இறுதியுடன் வெளியேறியது. அடுத்து 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, மிக மோசமாக சொதப்பி ஆஸ்திரேலிய அணியிடம் தோல்வி அடைந்தது.
அதேபோல 2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பையில் தான் ஆடிய முதல் பத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. ஆனால் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் மீண்டும் தோல்வி அடைந்தது இந்தியா. அதனால் ரசிகர்கள் மனமுடைந்து போனார்கள். அதன் பின் நடந்த இந்திய அணியின் ஒவ்வொரு போட்டியிலும் உலகக்கோப்பை இறுதிப் போட்டி தோல்வியை சுட்டிக்காட்டி கொண்டே வந்தனர்.
இந்த நிலையில் 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன் இந்திய அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் இடம் பெற்று இருக்கும் ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் அணியை பலரும் உற்றுநோக்கி வந்தனர்.
ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ஹர்திக் பாண்டியா என இந்திய டி20 அணியின் நான்கு முக்கிய வீரர்கள் அந்த அணியில் இருந்த நிலையில், அந்த அணி ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி இருந்தால் ரசிகர்களுக்கு இந்தியா மீது நம்பிக்கை ஏற்பட்டு இருக்கும். ஆனால், மும்பை இந்தியன்ஸ் 2024 ஐபிஎல் தொடரில் மிக மோசமாக ஆடியது. புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை மட்டுமே பிடித்தது.
அதனால் இயல்பாகவே இந்திய அணியின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழவில்லை. தற்போது இந்திய ரசிகர்களின் வேண்டுகோள் என்னவென்றால் எப்படியாவது இந்த டி20 உலகக் கோப்பையை வென்று கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ஏற்பட்ட வலியை போக்க வேண்டும் என்பது தான்.