சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், வங்கதேச அணியால் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. இதே வங்கதேச அணி சில நாட்களுக்கு முன் பாகிஸ்தான் அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியதை சுட்டிக்காட்டி பாகிஸ்தான் அணியை ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
இந்திய அணி 4302 நாட்களாக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடர்களில் தோல்வி அடையாமல் இருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் அணி 24 நாட்களுக்கு முன்பு சொந்த மண்ணில் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வி அடைந்து உள்ளது. அது குறித்த புள்ளி விவரம் ஒன்றை சுட்டிக்காட்டி ரசிகர்கள் பாகிஸ்தான் அணியை கேலி செய்து வருகின்றனர்.

வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற அளவில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம், இரண்டாவது போட்டியில் வங்கதேசம் வென்றாலும் கூட தொடரை இந்தியா இழக்காது என்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
2012 ஆம் ஆண்டுக்கு பின் இதுவரை இந்திய அணி இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை கூட இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சொந்த மண்ணில் நீண்ட நாட்களாக டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்கும் அணிகளில் இந்திய அணி முதல் இடத்தில் உள்ளது. 4302 நாட்களாக இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோல்வியடையாமல் உள்ளது.
இந்திய அணிக்கு அடுத்து அதிகபட்சமாக தென்னாப்பிரிக்கா 2020 ஆம் ஆண்டுக்கு பின் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரிலும் தோல்வி அடையாமல் உள்ளது. அதாவது தென்னாப்பிரிக்க அணி 1704 நாட்களாக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழக்காமல் உள்ளது. ஆஸ்திரேலியா (1348 நாட்கள்) மற்றும் இங்கிலாந்து (1201 நாட்கள்) அணிகள் கடைசியாக 2021 ஆம் ஆண்டில் தோல்வி அடைந்து இருந்தன.
மற்ற அணிகள் எல்லாம் கடந்த இரண்டு ஆண்டுகளில் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடர்களில் தோல்வியை சந்தித்துள்ளன. பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் 24 நாட்களுக்கு முன் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 - 0 என தோல்வி அடைந்திருந்தது. இதை அடுத்து இந்திய அணியையும், பாகிஸ்தான் அணியையும் ஒப்பிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருந்தது. அதன் பின் இதுவரை இந்திய அணி எந்த டெஸ்ட் தொடரிலும் தோல்வி அடையவில்லை. தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய மூன்று கேப்டன்களின் கீழ் இந்திய அணி இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் ஆடி உள்ளது. இதில் குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய மண்ணில் இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரில் கூட தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.