டாக்கா : வங்கதேச கிரிக்கெட் அணி பல ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வந்தாலும் அவர்களுக்கு பெரிய அளவு மற்ற நாடுகளில் ரசிகர்கள் பட்டாளம் கிடையாது. அதற்கு காரணம் வங்கதேச வீரர்களின் திமிர் தனம் தான். என்னதான் திறமை இருந்தாலும் களத்தில் மரியாதையாக நடந்து கொள்ளும் வீரர்களுக்கு தான் எப்போதுமே ரசிகர்கள் இருப்பார்கள்.
ஒருவேளை விராட் கோலி போல் திறமை வாய்ந்த வீரராக இருந்து களத்தில் கத்தினால் கூட அதில் ஏதேனும் ஒரு நியாயம் இருக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் என்னதான் களத்தில் திமிராக நடந்து கொண்டாலும், செயலில் அவர்கள் சுட்டி. ஆனால் களத்திலும் செயலிலும் வெட்டியாக இருக்கும் வங்கதேச அணி எப்போதுமே எதிரணி வீரர்களையும் ரசிகர்களையும் வம்பு இழுப்பது வழக்கமாகும்.

அதுவும் அத்தி பூத்தார் போல் ஏதேனும் ஒரு வெற்றியை பெற்று விட்டால் போதும். வங்கதேச அணி ரசிகர்களும் வீரர்களும் ராக்கெட் ஏறி விண்ணுக்கு சென்று கொண்டாடி விடுவார்கள். மீண்டும் ஒரு தோல்வி அடைந்தால் மட்டுமே அவர்களுடைய கால் மீண்டும் தரையில் படும். இந்த சூழலில் இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறுகிறது.
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. பாகிஸ்தானை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்திய வங்கதேசம், தற்போது இந்தியாவையும் இரண்டு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தி விடுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறது. ஆனால் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா இதுவரை 13 போட்டிகளில் விளையாடி ஒரு போட்டியில் கூட தோல்வியை தழுவியது இல்லை.
மாறாக வங்கதேச அணி 11 போட்டிகளில் தோல்வியும் இரண்டு போட்டிகளில் டிராவும் கண்டிருக்கிறது. அது மட்டுமில்லாமல் இந்தியா அதன் சொந்த மண்ணில் தோல்வியை தழுவாமல் இருக்கின்றது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளை முயற்சி செய்து விட்டு தங்களால் முடியவில்லை என்று கையை விரித்து விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் கடந்த 17 டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி சொந்த மண்ணில் தோல்வியை கண்டதில்லை.
இப்படி இருக்கும்போது வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா தான் வெற்றி பெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் வங்கதேச அணியில் இடம் பெற்றுள்ள புதிய வேகப்பந்துவீச்சாளர் நஹித் ரானா, இந்தியாவுக்கு எதிரான தொடரை வங்கதேசம் வெல்லும் என்று திமிராக பேசியிருக்கிறார். இது குறித்து பேசிய அவர், இந்திய தொடருக்காக நாங்கள் கடினமான முறையில் தயாராகி வருகின்றோம்.
நாங்கள் ஏற்கனவே எங்களுடைய பயிற்சியை தொடங்கி விட்டோம். நாங்கள் எந்த அளவுக்கு பயிற்சி செய்கிறோமோ அந்த அளவிற்கு போட்டியில் சிறப்பாக செயல்படுவோம் என்று நம்புகிறோம். எங்களுடைய திட்டத்தை போட்டியில் நடைமுறைப்படுத்த தனி பயிற்சி மேற்கொண்டு வருகின்றோம். இந்தியா ஒரு நல்ல அணி தான். ஆனால் இம்முறை யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்கள் தான் வெற்றி பெறுவார்கள்.
இந்தியாவிற்கு சென்று அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம். இம்முறை தொடரை நாங்கள் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கருதுகின்றேன். இந்திய தொடரில் என்னுடைய மிகப்பெரிய பங்களிப்பை நான் செலுத்துவேன். நாம் எந்த அளவுக்கு வேகமாக பந்து வீசுகிறோம் என்பதை முன்னாலேயே தீர்மானிக்க முடியாது. இது உடலையும் மனதையும் பொறுத்தது சில சமயம் நாம் நினைத்தது களத்தில் நடக்கும். சில சமயம் நடக்காது.
நான் எப்போதும் 150 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீச வேண்டும். இல்லை அதற்கு மேலாக வேகமாக பந்து வீசவேண்டும் என்றெல்லாம் நினைத்தது கிடையாது. அணியின் திட்டத்தை களத்தில் நடைமுறைப்படுத்துவதில் தான் என்னுடைய முழு கவனம் இருக்கும். என்னுடைய நண்பர்கள், குடும்பத்தினர் அனைவரும் என்னுடைய செயல்பாடுகளை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறார்கள் என்று நகித் ராணா கூறியுள்ளார்.