சென்னை: இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. அடுத்து மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் இரு அணிகளும் விளையாட உள்ளன. இதில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இரண்டாவது போட்டி உத்தர பிரதேசத்தில் உள்ள கான்பூரில் நடைபெற உள்ளது. அந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
வங்கதேச நாட்டில் நிலவும் கலவரங்களுக்கு மத்தியில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. அதை சுட்டிக்காட்டி வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப் போவதாக உத்தர பிரதேசத்தில் உள்ள சில அரசியல் கட்சிகள் அறிவித்துள்ளன. அதனால், இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஏதேனும் அச்சுறுத்தல் சம்பவங்கள் நடைபெறலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில், வங்கதேச அணியின் வீரர்கள் மற்றும் வங்கதேச கிரிக்கெட் அமைப்பின் அதிகாரிகள் பதற்றம் அடைந்து உள்ளனர். இது குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவுடன் பேசி இருக்கின்றனர். அப்போது ஜெய் ஷா "இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்படும்." என உத்தரவாதம் அளித்து இருக்கிறார்.
இது குறித்து பேசிய பிசிசிஐ அதிகாரி ஒருவர், "நாங்கள் இரண்டாவது போட்டி நடைபெற உள்ள மைதானம் மற்றும் அங்கு நிலவக்கூடிய சூழ்நிலைகளை நெருக்கமாக கண்காணித்து வருகிறோம். திட்டமிட்டபடி கான்பூர் மைதானத்தில் போட்டி நடைபெறுவதை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து இருக்கிறோம். கான்பூர் மைதானம் இரண்டு அணிகளையும் வரவேற்று போட்டியை நடத்த தயாராக உள்ளது. இரண்டாவது போட்டி எந்த மைதானத்திற்கும் மாற்றப்படாது. நிச்சயமாக கான்பூரில் தான் நடைபெறும். அதே சமயம் அங்கு எழுந்திருக்கும் எதிர்ப்புகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்." என்றார்.
நொய்டாவில் ஆப்கானிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற இருந்த நிலையில், அங்கு இருந்த மோசமான மைதான பராமரிப்பு மற்றும் வடிகால் வசதிகளால் தேங்கி இருந்த மழை நீரை வெளியேற்ற முடியாமல் ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் போட்டி கைவிடப்பட உள்ளது. இந்த சூழ்நிலையில், கான்பூர் டெஸ்ட் போட்டியின் போதும் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டு டெஸ்ட் போட்டியை நடத்த முடியாமல் போனால் அது பிசிசிஐ-க்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும். அதை கருத்தில் கொண்டு கான்பூர் டெஸ்ட் போட்டிக்கு அதிகபட்ச காவல்துறை பாதுகாப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோத உள்ள முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் விவரம் -
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (மாற்று விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.