சென்னை: இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் இதற்கு முன் பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்தார். அவர் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களால் ஏமாற்றத்திலும், சோகத்திலும் இருந்ததாகவும், இந்திய அணியில் முதல் போட்டியிலேயே அவர் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் ரசிகர்கள் சுட்டிக் காட்டி வருகின்றனர்.
கடந்த ஆண்டு வரை மோர்னே மோர்கல் பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டார். தான் ஆடிய காலத்தில் உலகின் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவராக வலம் வந்த மோர்னே மோர்கல் பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினார். அதே சமயம், பாகிஸ்தான் அணி தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தது. பாகிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர்கள் மிக மோசமாக பந்து வீசினர்.

2023 உலகக் கோப்பை ஒரு நாள் போட்டியில் பாகிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. அத்துடன் பாகிஸ்தான் அணியின் ஒட்டுமொத்த பயிற்சியாளர் குழுவும் பதவி நீக்கம் செய்யப்பட்டது. பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளர் பதவியில் இருந்து மோர்னே மோர்கல் நீக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கும்படி பிசிசிஐ-இடம் கேட்டுக் கொண்டார்.
நீண்ட ஆலோசனைக்கு பின் மோர்னே மோர்கல் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவரின் பதவிக் காலம் துவங்கியது. பவுலிங் பயிற்சியாளராக அவர் பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்று இருக்கிறது. மேலும், இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் அனைவரும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர்.
இந்த போட்டியின் இடையே மோர்னே மோர்கல் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இதே மோர்னே மோர்கல் பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக இருந்தபோது அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் சொதப்பிய போதெல்லாம், அவர் ஏமாற்றத்துடனும், சோகத்துடனும் இருந்தார். அந்த புகைப்படங்களை தற்போது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக இருந்தபோது ஏமாற்றத்துடன் இருந்தார். ஆனால், இந்திய அணியின் பயிற்சியாளராக வந்தவுடன் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் என சுட்டிக்காட்டி வருகின்றனர்.
இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர் பாஸித் அலி கூறுகையில், "பாகிஸ்தான அணியின் பந்து வீச்சாளர்கள் தாங்கள் கிரிக்கெட் விளையாட்டை விட மிகப் பெரியவர்கள் என்று நினைத்தார்கள். அவர்கள் தங்களுக்கு முன் மோர்னே மோர்கல் ஒரு ஆளே இல்லை என்று நினைத்தார்கள். ஆனால், இப்போது அந்த வித்தியாசம் நமக்கு புரிகிறது. இதே வங்கதேச அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடியது. அப்போது பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்தது. இதே வங்கதேசம் அணிதான் பாகிஸ்தானை ஒயிட் வாஷ் செய்து இருந்தது. இந்திய அணிக்கும், பாகிஸ்தான் அணிக்கும் உள்ள வித்தியாசம் மனதில் தான் இருக்கிறது. நாம் என்ன யோசிக்கிறோம், எப்படி செயல்படுகிறோம் என்பதில்தான் உள்ளது." என்றார்.