மும்பை: வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள நான்கு வீரர்களுக்கு நிச்சயமாக பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என கூறப்படுகிறது. அவர்கள் நால்வரும் அடுத்து வரும் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. ஆனால், அவர்களுக்கு அத்தனை எளிதில் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது. அவர்கள் "வாட்டர் பாயாக" தண்ணீர் சுமந்து செல்ல வேண்டிய வேலையை தான் செய்ய நேரிடும்.
தற்போது வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் 16 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். அந்த வீரர்கள் விவரம் -

ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.
இதில் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் பேட்டிங் வரிசையில் முதல் ஆறு இடங்களில் இடம் பெறுவார்கள். அடுத்து ஐந்து பந்துவீச்சாளர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், முகமது சிராஜ் மற்றும் பும்ரா இடம் பெறுவார்கள். குல்தீப் யாதவ் மற்றும் யாஷ் தயாள் இரண்டு போட்டிகளிலும் களமிறங்க வாய்ப்பு கிடைக்காது.
முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் பும்ராவுக்கு ஓய்வு அளித்து விட்டு ஆகாஷ் தீப் அவரது இடத்தை நிரப்புவார். குல்தீப் யாதவ் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக இருந்தாலும் அணியில் இடம் பெற்றிருக்கும் சக இடது கை சுழற் பந்துவீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் பேட்டிங்கிலும் அணிக்கு கை கொடுப்பார்கள் என்பதால் அவர்களே பிளேயிங் லெவனில் இடம் பெற அதிக வாய்ப்பு உள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இடம் பெறாத நிலையில் சர்ஃபராஸ் கான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆக அப்போது பிளேயிங் லெவனில் வாய்ப்பு பெற்று இருந்தார். அவர் அப்போது மூன்று போட்டிகளில் மூன்று அரை சதங்களை அடித்து இருந்தார். ஆனால், தற்போது அவர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டாலும் போட்டிகளில் களம் இறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காது.
எந்த மிடில் ஆர்டர் வீரருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே சர்ஃபராஸ் கானுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதே போல, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனாக சிறப்பாக செயல்பட்ட துருவ் ஜுரல் தற்போது ரிஷப் பண்ட் வருகையால் அணியில் தனது இடத்தை இழந்துள்ளார். எனினும், அவர் மாற்று விக்கெட் கீப்பராக இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கிறார். அவர் நீண்ட கால அடிப்படையில் இந்திய அணியில் வாய்ப்பு பெறுவார் எனக் கூறப்படுகிறது. ரிஷப் பண்ட்டுக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது ஓய்வு அளிக்கப்படாலோ மட்டுமே துருவ் ஜுரல் பிளேயிங் லெவனில் இடம் பெற முடியும்.