ஐதராபாத்: இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் சீனியர் வீரரான ஹர்திக் பாண்டியா இடையில் ஈகோ யுத்தம் நடந்து வருவதாக பேசப்பட்டு வந்தது. இந்த விவகாரத்திற்கு வங்கதேச அணிக்கு எதிரான கடைசி போட்டிக்கு பின் நடந்த பரிசளிப்பு விழாவில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வென்ற பின், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்தார். இதனால் இந்திய அணியின் அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா கொண்டு வரப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்த பின், திடீரென ஹர்திக் பாண்டியா ஓரம் கட்டப்பட்டார்.

ஹர்திக் பாண்டியாவின் காயம் மற்றும் ஃபிட்னஸ் பிரச்சனைகளை காரணம் காட்டி, இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம் செய்யப்பட்டார். அதுமட்டுமல்லாமல் இந்திய அணி வீரர்களின் ஆதரவும் சூர்யகுமார் யாதவிற்கே இருப்பதாக சில தகவல்கள் வெளியாகின. இதனால் பலரும் ஹர்திக் பாண்டியாவிற்கு துரோகம் நடந்துள்ளதாக விமர்சிக்க தொடங்கினர்.
ஏற்கனவே மும்பை அணி கேப்டன்சி விவகாரத்தில் ஹர்திக் பாண்டியாவுக்கு சூர்யகுமார் யாதவ் ஆதரவாக இருக்கவில்லை. ருதுராஜ் கேப்டனாக பொறுப்பேற்ற போது வாழ்த்து கூறிய சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியாவுக்கு எந்த வாழ்த்தையும் அளிக்கவில்லை. இதனால் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா இடையில் ஈகோ பிரச்சனை இருப்பதாக பேசப்பட்டு வந்தது.
இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரின் போது கூட ஹர்திக் பாண்டியா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. சூர்யகுமார் யாதவை நேரில் சந்தித்த போது தான் ஹர்திக் பாண்டியா வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வங்கதேச டி20 தொடரில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா தொடர் நாயகன் விருதினை கைப்பற்றினார்.
அப்போது ஹர்திக் பாண்டியா பேசுகையில், இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் இருவரும் எனக்கு சுதந்திரமாக செயல்பட அறிவுறுத்தியுள்ளனர். அது இந்திய அணிக்குள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். அதேபோல் பரிசளிப்பு விழாவிற்கு பின் கோப்பையை பெற்றுக் கொண்ட சூர்யகுமார் யாதவ், நேராக மயங்க் யாதவ் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி கைகளில் அளித்தார்.
அதன்பின் நேராக ஹர்திக் பாண்டியா இருக்கும் திசை பக்கம் நகர்ந்த சூர்யகுமார் யாதவ், அவரின் தோள்களில் கைகளை போட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதன் மூலமாக ஹர்திக் பாண்டியா - சூர்யகுமார் யாதவ் இடையில் எந்த ஈகோ யுத்தமும் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்திய அணியின் இரு சீனியர் வீரர்களும் ஆதரவாக இருப்பது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.