ஐதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இளம் நட்சத்திர வீரர்களான திலக் வர்மா மற்றும் ஹர்சித் ராணா இருவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்திய அணி எந்த 2 வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும் என்ற விவாதம் தொடங்கியுள்ளது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான கடைசி டி20 போட்டி நாளை ஐதராபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. ஏற்கனவே இந்திய அணி டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளதால், கடைசி ஆட்டம் சம்பிரதாய போட்டியாக நடக்கும். இதனால் இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத சில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வங்கதேச டி20 தொடரில் வருண் சக்கரவர்த்தி, நிதிஷ் குமார் ரெட்டி இருவரும் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளனர். அதேபோல் பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா, நிதிஷ் குமார் ரெட்டி, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் உள்ளிட்டோருக்கு சிறந்த தொடராக அமைந்துள்ளது. ஆனால் பிளேயிங் லெவனில் இருந்தாலும் ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோருக்கு திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதேபோல் ஸ்பின்னரான ரவி பிஷ்னாய், இளம் வீரர் ஹர்சித் ராணா, விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த ஆட்டம் ஐதராபாத் மைதானத்தில் நடப்பதால், இளம் நட்சத்திர வீரரான திலக் வர்மாவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் கேகேஆர் அணிக்காக ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி 13 போட்டிகளில் 19 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்சித் ராணாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு பதிலாக மயங்க் யாதவ் மற்றும் ரியான் பராக் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே ஜிம்பாப்வே டி20 தொடர், இலங்கை ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ஹர்சித் ராணா தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஆனால் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது 3வது முறையாக இந்திய அணிக்கு வந்த போதும், இதுவரை வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் இம்முறை நிச்சயம் ஹர்சித் ராணாவை பிளேயிங் லெவனில் இந்திய அணி நிர்வாகம் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.