பெங்களூர்: துலீப் டிராபியில் இந்தியா டி அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணிக்காக ஆடி வரும் நட்சத்திர இளம் வீரர் திலக் வர்மா சதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலமாக இந்தியா ஏ அணியின் முன்னிலை 450 ரன்களை கடந்துள்ளதால், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி தோல்வியை சந்திக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
ஜனவரி மாதம் நடந்த ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர் திலக் வர்மாவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் ஸ்பின்னர் என்பதால் இந்திய அணியின் அடுத்த சுரேஷ் ரெய்னாவாக உருவாகுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பேட்டிங்கில் திலக் வர்மா செய்த சில தவறுகளால், இந்திய அணியில் இருந்தே ஓரங்கட்டப்பட்டார்.

இருந்தாலும் ஐபிஎல் தொடரிலும் மும்பை அணிக்காக மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய திலக் வர்மா, ஒவ்வொரு முறையும் சரிவில் இருந்து மும்பை அணியை கவுரவ இலக்கை எட்டுவதற்கு காரணமாக இருந்தார். இருந்தாலும் இந்திய அணியில் மீண்டும் இடம் கிடைக்கவில்லை. இதனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
அதுமட்டுமல்லாமல் பவுலிங்கில் முன்னேற வேண்டும் என்பதையும் கவனம் கொண்ட திலக் வர்மா, ரெட் பாலில் ஸ்பின் பயிற்சியை தொடங்கி அசத்தினார். இந்த நிலையில் துலீப் டிராபி தொடரில் இந்தியா ஏ அணிக்காக விளையாட திலக் வர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்தியா பி அணிக்கு எதிரான முதல் போட்டியில் சீனியர் வீரர்கள் இருந்ததால், பிளேயிங் லெவனில் திலக் வர்மா சேர்க்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்தியா டி அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஏ அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா ஏ அணி 290 ரன்களை குவித்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா வெறும் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய இந்தியா டி அணி 183 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது.
இதனால் 107 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை இந்தியா ஏ அணி தொடங்கியது. இந்தியா ஏ அணியின் பிரதாம் சிங் - மயங்க் அகர்வால் மிகச்சிறந்த அடித்தளம் அமைத்து கொடுக்க, பின்னர் வந்த திலக் வர்மா அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரதாம் சிங்குடன் இணைந்து 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த திலக் வர்மா, எளிதாக அரைசதம் கடந்தார்.

தொடர்ந்து நிதானமாக ஆடிய திலக் வர்மா, மிரட்டலாக சதம் விளாசினார். கிடைத்த வாய்ப்பில் தனது திறமையை திலக் வர்மா நிரூபித்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் தேவ்தத் படிக்கல்-க்கு இந்திய அணிக்காக அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் திலக் வர்மா அடுத்தடுத்து வரும் ரஞ்சி டிராபி போட்டிகளில் தொடர்ச்சியாக ரன்கள் சேர்க்கும் பட்சத்தில் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.