ஐதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதம் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார். ரோஹித் சர்மாவை போல் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடியாக விளையாடியதால், இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது.
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் முக்கியக் காரணமாக அமைந்துள்ளார். தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 8 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 111 ரன்களை விளாசி சாதனை படைத்தார்.

இதன் மூலமாக டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சதம் விளாசிய முதல் விக்கெட் கீப்பர் என்ற பெருமையை சஞ்சு சாம்சன் பெற்றார். அதேபோல் நீண்ட நாட்களாக இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிப்பதற்காக போராடி வந்த சஞ்சு சாம்சன், இந்தப் போட்டியின் மூலமாக கிட்டத்தட்ட தொடக்க வீரருக்கான இடத்தை உறுதி செய்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையில், அவருக்கான மாற்று வீரரை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தேடி வந்தார். ஏனென்றால் சுப்மன் கில் டி20 கிரிக்கெட்டிலும் நிதான போக்கை கடைபிடித்து, பின்னர் அதிரடிக்கு திரும்பும் பாணியிலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இடதுகை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால், மற்றொரு தொடக்க வீரருக்கான இடத்தை நிரப்பிவிடுகிறார்.
அதேபோல் விக்கெட் கீப்பருக்கான ரேசில் ரிஷப் பண்ட் முன்னிலையில் உள்ளார். தற்போது ரிஷப் பண்ட், சுப்மன் கில் உள்ளிட்டோர் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளதால், சஞ்சு சாம்சனுக்கு தொடக்க வீரராக களமிறங்கும் வாய்ப்பு கிடைத்தது. வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் முதல் போட்டியில் 19 பந்துகளில் 29 ரன்களும், 2வது போட்டியில் 7 பந்துகளில் 10 ரன்களும் விளாசினார்.
இதனால் பெரிய இன்னிங்ஸை விளையாட வேண்டிய கட்டாயம் சஞ்சு சாம்சனுக்கு இருந்தது. அதனை ரோஹித் சர்மா பாணியில் எந்தவித குழப்பமும் இல்லாமல், அசத்தலாக ஆடி சாதித்துள்ளார். அதிலும் அரைசதத்தை சிக்ஸ் மூலமாகவும், சதத்தை பவுண்டரி மூலமாகவும் விளாசியது பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரையும் உற்சாகப்படுத்தியுள்ளது.
இதனால் சுப்மன் கில்லை இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் சஞ்சு சாம்சன் சாதாரணமாக அட்டாக்கிங் மனநிலை கொண்ட வீரர் தான். ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரி அடிக்கப்பட வேண்டும் என்பதில் தீவிரமாக இருப்பார். இதன் காரணமாக சுப்மன் கில் இனி இந்திய டி20 அணியில் இடம்பிடிப்பது கடினமான விஷயமாக பார்க்கப்படுகிறது.