டாக்கா: 2026 அண்டர் 19 உலகக்கோப்பையில் இந்தியா - வங்கதேச போட்டியின் போது டாஸ் நிகழ்வில் இரு அணி கேப்டன்களும் கை குலுக்கிக் கொள்ளவில்லை. இது பெரும் சர்ச்சை ஆனது. இது குறித்து வங்கதேச கிரிக்கெட் வாரியம் (BCB) அவசரமாக ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் ஜூனியர் உலகக்கோப்பையில், டாஸ் போடும்போது இந்திய மற்றும் வங்கதேச கேப்டன்கள் கைகுலுக்கிக் கொள்ளாதது பெரும் சர்ச்சையான நிலையில், வங்கதேசம் பதறிப்போய் விளக்கம் அளித்துள்ளது. ஆனால், சப்பைக்கட்டு காரணம் ஒன்றை கூறி மழுப்பி இருக்கிறது.

இந்தியா - வங்கதேசம் மோதிய ஆட்டத்தில், வங்கதேச அணியின் வழக்கமான கேப்டன் அஜிசுல் ஹக்கீம் உடல்நலக்குறைவால் பங்கேற்கவில்லை. அவருக்குப் பதிலாகத் துணை கேப்டன் ஜாவத் அப்ரார் டாஸ் போட வந்தார். டாஸ் முடிந்த பிறகு, இந்திய கேப்டன் ஆயுஷ் மத்ரேவும், ஜாவத் அப்ராரும் கைகுலுக்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றனர்.
இந்தியா - வங்கதேசம் இடையே ஏற்கனவே கிரிக்கெட் மற்றும் அரசியல் ரீதியாகப் பனிப்போர் நிலவி வரும் நிலையில், வீரர்கள் இப்படி நடந்துகொண்டது "வேண்டுமென்றே செய்யப்பட்ட அவமதிப்பு" என்று ரசிகர்கள் விமர்சித்தனர்.
இந்த விஷயம் பெரிதானதைத் தொடர்ந்து, வங்கதேச கிரிக்கெட் வாரியம் டாக்காவில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
"எங்கள் கேப்டனுக்கு உடல்நிலை சரியில்லாததால் தான் துணை கேப்டன் டாஸ் போட வந்தார். எதிரணி கேப்டனுடன் கைகுலுக்காதது திட்டமிட்டுச் செய்யப்பட்ட செயல் அல்ல. அது ஒரு தருணத்தில் ஏற்பட்ட கவனக்குறைவு மட்டுமே. எதிரணியை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் துளியும் இல்லை. நாங்கள் கிரிக்கெட் உணர்வை மதிப்பவர்கள்" என்று கூறியுள்ளனர்.
மேலும் அந்த அறிக்கையில், "இந்தச் சம்பவத்தை நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளோம். இது போன்று இனி நடக்கக்கூடாது என்று அணி நிர்வாகத்திற்கும், வீரர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளோம். மைதானத்திலும், வெளியிலும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கண்டித்துள்ளோம்" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம் இப்படிச் சொன்னாலும், பின்னணியில் நடக்கும் சம்பவங்கள் வேறாக உள்ளன. ஐபிஎல் தொடரிலிருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டது வங்கதேசத்தைக் கோபப்படுத்தியுள்ளது. பாதுகாப்பு காரணம் காட்டி டி20 உலகக்கோப்பை போட்டிகளை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐசிசி-யிடம் வங்கதேசம் முறையிட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழலில், ஜூனியர் வீரர்கள் கைகுலுக்காமல் இருந்தது வெறும் "மறதி" தானா அல்லது "மனக்கசப்பா" என்பது ரசிகர்களுக்கு புரியும்.