குவாலியர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் களமிறங்கியதன் மூலமாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி, 3 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார். அதேபோல் கம்பேக் போட்டியிலேயே 4 ஓவர்களில் 31 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2021ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னர்களில் ஒருவராக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டிருந்தார். ஏனென்றால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமான பவுலிங் செய்த அவர், இந்திய அணிக்காக டி20 உலகக்கோப்பையிலும் மேஜிக் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் வருண் சக்கரவர்த்தியை எதிரணி வீரர்கள் எளிதாக சமாளித்தனர். மோசமாக பவுலிங் செய்யவில்லை என்றால், வருண் சக்கரவர்த்திக்கு இந்திய அணியின் கதவுகள் மீண்டும் திறக்கப்படவே இல்லை. 3 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடி வந்தார். இந்த நிலையில் கடந்த ஐபிஎல் தொடரில் மட்டும் 16 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன்பின் கேகேஆர் அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் கம்பீர், இந்திய அணியின் பயிற்சியாளராக கொண்டு வரப்பட்டார். இதனால் வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடர்களில் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் வங்கதேச டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார்.
இதன் மூலமாக 3 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு வருண் சக்கரவர்த்தி கம்பேக் கொடுத்தார். இருந்தாலும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்பட்ட போது, முதல் டி20 போட்டியிலேயே பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து பவர் பிளேவின் 5வது ஓவரிலேயே வருண் சக்கரவர்த்திக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது.
இந்த ஓவரின் 2வது பந்திலேயே ஹிருடாய் கொடுத்த கேட்சை நிதிஷ் குமார் ரெட்டி தவறவிட்டார். இதனால் வருண் சக்கரவர்த்தி அதிர்ஷ்டம் இல்லையோ என்று வர்ணனையில் பேச்சுகள் எழுந்தன. அந்த ஓவரில் மட்டும் ஒரு சிக்ஸ், 2 பவுண்டரி உட்பட 15 ரன்கள் சேர்க்கப்பட்டது. பின்னர் அவர் வீசிய 2வது ஓவரில் மீண்டும் ஹிருடாய் அடித்த பந்து ஹர்திக் பாண்டியா கைகளில் சென்று விழுந்தது.
இதன்பின் 9வது ஓவரை வீசிய வருண் சக்கரவர்த்தி ஜேக்கர் அலியை போல்ட் எடுத்து வெளியில் இருப்பினார். தொடர்ந்து 14வது ஓவரை வீசிய அவர், ரிஷாட் ஹொசைனை 11 ரன்களில் வீழ்த்தி பெவிலியன் அனுப்பி வைத்தார். இதன் மூலமாக 4 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வருண் சக்கரவர்த்தி அசத்தியுள்ளார்.
3 ஆண்டுகளுக்கு பின் வந்துள்ள வருண் சக்கரவர்த்தி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மரண மாஸ் கம்பேக்கை கொடுத்துள்ளார். பவுலிங்கில் சுனில் நரைனை போல் செயல்படக் கூடியவர் என்பதால், இந்திய டி20 அணியில் வருண் சக்கரவர்த்தி நிரந்தர வீரராக இடம்பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.