குவாலியர் : இந்திய கிரிக்கெட் அணியின் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி விளையாடுவது மறுபிறவி எடுத்தது போல் இருப்பதாக தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி உருக்கத்துடன் பேசி இருக்கிறார். கடைசியாக 2021 டி20 உலக கோப்பையில் வருண் சக்கரவர்த்தி விளையாடினார். ஆனால் அதன் பிறகு அவர் இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டார்.
தொடர்ந்து ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல் போன்ற தொடர்களில் சிறப்பாக செயல்பட்டாலும் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் கம்பீர் பயிற்சியாளராக பதவியேற்ற பிறகு வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் இந்திய டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதில் நான்கு ஓவர்கள் வீசிய வருண் சக்கரவர்த்தி 31 ரன்கள் விட்டுக் கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். அது மட்டும் இல்லாமல் தான் வீசிய முதல் ஓவரில் இந்திய வீரர் நிஷாந்த் ரெட்டி ஒரு ஈஸியான கேட்ச் வாய்ப்பை தவற விட்டார். இந்த நிலையில் தனது செயல்பாடு குறித்து கருத்து தெரிவித்துள்ள வருண் சக்கரவர்த்தி, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணியில் அடி எடுத்து வைத்திருக்கிறேன்.
இதை நினைக்கும் போது எனக்கு உணர்ச்சி வசமாக இருந்தது. இந்திய அணியின் ஜெர்சியை அணிவதை நினைத்து மகிழ்ச்சி கொள்கின்றேன். இது எனக்கு மறுபிறவி போல் இருந்தது. இந்திய அணியில் இடம் கிடைக்காத நேரத்தில் நான் தொடர்ந்து பயிற்சி செய்து வந்தேன். ஒரு பவுலர் என்ன செய்ய வேண்டுமோ, அந்த நடைமுறையை தொடர்ந்து பின்பற்றினேன். ஐபிஎல் தொடரிலும் விளையாடுவதற்கு முன் நான் அதை தான் செய்தேன்.
இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்பது குறித்து எல்லாம் நான் யோசிக்காமல் என்னுடைய வேலையை நான் சரியாக செய்து கொண்டு இருந்தேன். எனக்கு எதிர்காலத்தை நினைப்பதை விட நிகழ்காலத்தில் என்ன செய்கிறோம் என்று நினைப்பதுதான் முக்கியம் என கருதுவேன். இதனால் பெரிதாக நான் எதையும் அலட்டிக் கொள்ள மாட்டேன். ஐபிஎல் தொடருக்கு பிறகு டிஎன்பிஎல் தொடரில் விளையாடினேன். திறமை வாய்ந்த வீரர்களுடன் விளையாடியது எனக்கு நல்ல பயனை தந்தது.
அஸ்வின் எனக்கு உறுதுணையாக அந்த தொடரில் இருந்தார். இதன் காரணமாக டிஎன்பிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை நாங்கள் வென்றோம். இதன் மூலம் எனக்கு நம்பிக்கை பிறந்தது. இந்த தொடருக்கு டிஎன்பிஎல் போட்டிகள் ஒரு நல்ல பயிற்சி கலமாக எனக்கு அமைந்தது. முதல் ஓவரில் என் பந்துவீச்சில் கேட்ச் மிஸ் ஆனது போன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டில் அடிக்கடி நடக்கும்.
இதை எல்லாம் வருத்தப்பட்டு கொண்டு இருக்க முடியாது. கடவுளுக்கு நன்றி தெரிவித்து க்கொள்ள வேண்டும். பல சவால்களைக் கடந்து தான் நான் இங்கு வந்திருக்கிறேன். இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட பிறகு பலரும் நான் அவ்வளவுதான் என்று நினைத்து விடுவார்கள்.நாம் தொடர்ந்து உச்ச கட்டத்தில் இருக்க வேண்டும். தொடர்ந்து வாய்ப்பு உருவாக்க வேண்டும். இம்முறை எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து என்னுடைய சிறப்பான பணியை மேற்கொண்டு அணியில் நீடிப்பேன் என்று நம்பிக்கை கொள்கிறேன் என வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.