Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சென்னையில் ரசிகர்களே இல்லையா? உறைந்து போன விராட் கோலி.. காலியாக இருந்த சேப்பாக்கம் மைதானம்

சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் டிக்கெட் விற்பனையில் குளறுபடிகள் நடந்தது விராட் கோலியை கவலைப்பட வைத்துள்ளது. இந்த போட்டியின் முதல் நாள் அன்று துவக்கத்தில் மைதானம் காலியாக இருந்ததை கண்டு விராட் கோலி அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.

அது குறித்து தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வினிடம் விராட் கோலி கேள்வி எழுப்பியும் இருந்தார். ஏன் ரசிகர்கள் வரவில்லை? இனி சென்னையில் டெஸ்ட் போட்டியை பார்க்க ரசிகர்கள் நேரில் வரமாட்டார்களா? என அவர் கேட்டு இருக்கிறார். சில மணி நேரம் கழித்து பெருமளவில் ரசிகர்கள் மைதானத்திற்குள் வந்திருக்கிறார்கள். ரசிகர்கள் மிகவும் தாமதமாக மைதானத்திற்கு வர காரணம் டிக்கெட் விற்பனையில் நடந்த குளறுபடி தான் என தற்போது தெரிய வந்துள்ளது.

ind vs ban india virat kohli

பொதுவாக டெஸ்ட் போட்டிகளுக்கு இரண்டு வகையான டிக்கெட்டுகள் வழங்கப்படும். ஒரு டெஸ்ட் போட்டி ஐந்து நாட்கள் வரை நடைபெறும் என்பதால், ஐந்து நாட்களுக்குமான சீசன் டிக்கெட் தனியாக விற்கப்படும். அதை தவிர்த்து டெஸ்ட் போட்டியில் ஒவ்வொரு நாளுக்குமான டிக்கெட்டும் விற்கப்படும். இந்த முறை சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் ஆடிய போட்டிக்கும் இரண்டு வகையான டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

ஆனால், இதில் சில குளறுபடிகள் நடந்தன. சீசன் டிக்கெட்டுகளை மட்டும் ஆன்லைனில் விற்ற தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு, ஒவ்வொரு நாளுக்குமான டிக்கெட்டுகளை மைதானத்திற்கே வந்து ரசிகர்கள் வாங்கிக் கொள்ளலாம் என அறிவித்தது. அதனால், போட்டி துவங்க சில மணி நேரங்கள் முன்பே ரசிகர்கள் மைதானத்தின் வாயிலில் கூடினர். ஆனால், ஒரே ஒரு இடத்தில் மட்டுமே டிக்கெட்டுகள் விற்கப்பட்டன.

அதனால், ஆயிரக்கணக்கான ரசிகர்களுக்கும் விரைவாக டிக்கெட் விற்க முடியவில்லை. மேலும், டிக்கெட்டை வாங்கிய ரசிகர்கள் அருகில் இருந்த வாயிலின் மூலமாகத்தான் மைதானத்திற்குள் செல்ல முடியும் என்பதால் ஒரே வாயிலில் பல்லாயிரம் ரசிகர்களும் கூடினர். பல்வேறு வாயில்களின் வழியாக ரசிகர்கள் வந்தால் அவர்களை விரைவாக பரிசோதித்து உள்ளே அனுப்ப முடியும்.

ஆனால், ஒரே வாயிலில் அனைத்து ரசிகர்களும் ஒன்று கூடியதால் அவர்களை பரிசோதித்து உள்ளே அனுப்ப நீண்ட நேரம் ஆனது. அதனால், டிக்கெட் விற்பனையிலும், ரசிகர்களை பரிசோதித்து உள்ளே அனுப்புவதிலும் தேவையற்ற தாமதம் ஏற்பட்டதால் தான் போட்டி துவங்கிய போது மைதானத்தில் ரசிகர்களே இல்லாத நிலை இருந்தது.

அதன்பின் ஒவ்வொரு நாளிலும் முதல் சில மணி நேரங்களுக்கு சேப்பாக்கம் மைதானம் பெருமளவுக்கு காலியாக இருந்தது. ஒவ்வொரு நாளுக்குமான டிக்கெட்டுகளையும் ஆன்லைனிலேயே விற்று இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காது என பலரும் சுட்டிக்காட்டி வருகின்றனர். சில நூறு டிக்கெட்டுகளை மட்டும் விற்க போகிறோம் என்றால் நேரில் விற்கலாம். ஆனால் முப்பதாயிரத்துக்கும் அதிகமான இருக்கைகள் கொண்ட சேப்பாக்கம் மைதானத்தின் டிக்கெட்டுகளை எப்படி ஒரே ஒரு கவுண்டரை வைத்து விற்றார்கள்? என ரசிகர்களும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

டெஸ்ட் போட்டி என்பதால் அதிக ரசிகர்கள் வர மாட்டார்கள் என்ற எண்ணத்தில் தமிழ்நாடு கிரிக்கெட் அமைப்பு இந்த முடிவை எடுத்திருக்கலாம். ஆனால், ரசிகர்கள் டெஸ்ட் போட்டியையும் நேரில் பார்க்க ஆர்வமாக தான் இருக்கிறார்கள். இனியாவது பெரும்பாலான டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகிறனர்.

Story first published: Tuesday, September 24, 2024, 15:48 [IST]
Other articles published on Sep 24, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+