சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 17 ரன்கள் எடுத்திருந்த போது மெஹதி ஹசன் பவுலிங்கில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனை ரீபிளேவில் பார்த்த போது பந்து விராட் கோலியின் பேட்டில் பட்டு இன்சைட் எட்ஜாகி பேடில் அடித்தது தெரிய வந்துள்ளது.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. 2வது நாள் ஆட்டத்தில் முதல் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே இந்திய அணி 376 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய அஸ்வின் 113 ரன்களை விளாசி இருந்தார். இதன்பின் களமிறங்கிய வங்கதேசம் அணி வெறும் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. நட்சத்திர வீரர் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன்பின் 2வது இன்னிங்ஸை 227 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தொடங்கியது. தொடக்க வீரரான ரோஹித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில் 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன்பின் சுப்மன் கில் - விராட் கோலி கூட்டணி இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை விரைவாக உயர்த்தியது.
விராட் கோலி களத்திற்கு வந்த பின் வங்கதேசம் அணி உடனடியாக ஸ்பின்னர்களை அட்டாக்கில் கொண்டு வந்தது. இதனால் கவனமாக விளையாடிய விராட் கோலி, எந்த பதற்றமும் இல்லாமல் ரன்களை சேர்க்க தொடங்கினார். 17 ரன்கள் எடுத்திருந்த போது, மெஹதி ஹசன் வீசிய பந்தை ஸ்வீப் அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்தை விராட் கோலி மிஸ் செய்ய, அது காலில் கட்டியிருந்த பேடில் பட்டு சென்றது.
இதனால் வங்கதேசம் வீரர்கள் நடுவரிடம் அவுட் என்று அப்பீல் செய்ய, அவர் உடனடியாக கைகளை உயர்த்தி அவுட் கொடுத்தார். அப்போது விராட் கோலி எதிர்முனையில் நின்றிருந்த சுப்மன் கில்லிடம், டிஆர்எஸ் ரிவ்யூ எடுக்கலாமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சுப்மன் கில், பேட்டில் பந்து அடித்ததா என்று மறுகேள்வி எழுப்பினார். அதற்கு விராட் கோலி, இல்லை என்று கூறி அரைமனதுடன் பெவிலியன் நோக்கி நடையை கட்டினார்.
இதன்பின் ரீபிளேவில் பார்த்த போது மெஹதி ஹசன் வீசிய பந்து விராட் கோலி பேட்டில் அடித்து கால்களில் பட்டது தெரிய வந்தது. இன்சைட் எட்ஜாகியதை விராட் கோலி உணராததால், விக்கெட்டை விராட் கோலி எளிதாக விட்டுக் கொடுத்துவிட்டதாக ரசிகர்கள் சோகமடைந்தனர். டிஆர்எஸ் ரிவ்யூ குறைந்தால் கூட பரவாயில்லை என்று விராட் கோலி, அப்பீலுக்கு சென்றிருக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அதேபோல் ஓய்வறையில் இருந்த ரோஹித் சர்மாவும் நேரடியாக ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். இறுதியாக இந்திய அணி 2வது நாள் ஆட்ட நேர முடிவில் 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து களத்தில் உள்ளது. இதன் மூலமாக இந்திய அணி 308 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சுப்மன் கில் 33 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதனால் 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.