சென்னை: இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ரன் அடிக்கும் பசியுடன் தீவிரமாக இருப்பதாக பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அடுத்த 10 டெஸ்ட் போட்டிகளை விராட் கோலி தீவிரமாக எதிர்நோக்கியுள்ளதாக கூறிய கம்பீர், ரன் மெஷினாக மீண்டும் செயல்பட தயாராகியுள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் மீது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனென்றால் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் இந்திய அணி முதல்முறையாக இந்திய அணி டெஸ்ட் போட்டியில் களமிறங்கவுள்ளது. அதுமட்டுமல்லாமல் 43 நாட்கள் விடுமுறைக்கு பின் இந்திய அணி கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கிறது.

அதுமட்டுமல்லாமல் விராட் கோலி, பும்ரா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் களமிறங்க தயாராக இருக்கின்றனர். அதிலும் இந்த ஆண்டில் முதல்முறையாக விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் களமிறங்கவுள்ளார். ஏனென்றால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் களமிறங்க தயாரான விராட் கோலி, கடைசி நேரத்தில் 2வது குழந்தை பிரசவத்திற்காக லண்டன் புறப்பட்டார்.
இதனால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலக வேண்டிய சூழல் விராட் கோலிக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக ஃபேப் 4 வீரர்களில் விராட் கோலி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் இழந்த இடத்தை மீண்டும் எட்டிப்பிடிக்க விராட் கோலி சிறப்பாக செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் வங்கதேசம் டெஸ்ட் தொடருக்கு முன்பாக இந்திய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இருவரும் நடத்திய நேர்காணல் வீடியோ வெளியாகியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து கம்பீர் பேசுகையில், விராட் கோலியை பற்றிய சிறந்த விஷயம் என்னவென்றால், உலகின் சிறந்த கிரிக்கெட்டராக இருக்க வேண்டும் என்று தீவிர பசியுடன் இருக்கிறார்.
வலைப்பயிற்சியாக இருக்கட்டும், உடற்பயிற்சி கூடமாக இருக்கட்டும்.. உலகின் தலைசிறந்த வீரர் என்பதற்கேற்ப மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஒரு பயிற்சியாளருக்கு அதுதான் முக்கியம் என்று நினைக்கிறேன். விராட் கோலியிடம் அப்போது பார்த்த அதே ரன் பசி அப்படியே இருக்கிறது. அடுத்த 10 போட்டிகளை மிகவும் ஆர்வமுடன் எதிர்பார்த்திருக்கிறார். ஆனால் அவர் வங்கதேச தொடருக்காக மட்டுமே கவனமாக தயாராகி வருகிறார்.
இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி மட்டும் பாசிட்டிவான மனநிலைக்கு திரும்பிவிட்டால், அவரால் என்ன செய்ய முடியும் என்பது அனைவருக்கும் தெரியும். இத்தனை ஆண்டுகளாக செய்து வந்ததை மீண்டும் செய்ய தொடங்குவார் என்று தெரிவித்துள்ளார். வங்கதேசம் அணிக்கு எதிரான 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 54.62 பேட்டிங் சராசரியுடன் 2 சதங்கள் உட்பட 437 ரன்களை விளாசி இருக்கிறார்.