கொழும்பு : இந்திய அணி, வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுப் போட்டியில் பங்கேற்க உள்ளது.
ஏற்கனவே, இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி விட்ட நிலையில், இது வீரர்களுக்கான பயிற்சிப் போட்டி போலவே நடைபெற உள்ளது.

அதனால், பல முக்கிய வீரர்களை வெளியே அமர வைத்து, இதுவரை சரியான வாய்ப்பு பெறாத வீரர்களை கேப்டன் ரோஹித் சர்மா ஆட வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக ரன் மெஷின் விராட் கோலிக்கு ஓய்வு கொடுத்து விட்டு சூர்யகுமார் யாதவை அந்த இடத்தில் ஆட வைக்க திட்டமிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தான் விராட் கோலியை வெளியே அமர வைப்பது தவறாக மாறி விடும் என எச்சரித்து இருக்கிறார் முன்னாள் இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர்.
ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், பும்ரா, முகமது சிராஜ் என 11 வீரர்கள் கொண்ட அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அக்சர் பட்டேல் தாக்குர் இடையே மற்றும் போட்டிகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டது.
மற்றபடி இந்திய அணி இதே 11 வீரர்கள் கொண்ட அணியுடன் உலகக்கோப்பைக்கு சென்றால் சிறப்பாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. ஆனால், இந்த 11 வீரர்கள் கொண்ட அணியையே இப்போது தான் இந்திய அணி நிர்வாகம் அடையாளம் கண்டுள்ளது.
தொடர்ந்து சில போட்டிகளில் இதே அணி ஆடினால் தான் இந்த வீரர்கள் அணியில் தங்கள் பணி என்ன என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். இந்த நிலையில் தான் முக்கியத்துவம் அற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பாதி வீரர்களை ஓய்வில் அமர வைத்து, வெளியே அமர்ந்து இருக்கும் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கலாம் என்ற தகவல் வெளியானது. ஸ்ரேயாஸ் ஐயர் முதுகு வலியில் இருந்தாலும் நேற்று கடும் பயிற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இதற்கு மறுப்பு கூறி உள்ள சஞ்சய் பங்கர், "ரோஹித் சர்மா நிச்சயம் ஆட வேண்டும். சுப்மன் கில் இளம் வீரர்தான். அவரும் ஆடுவார். விராட் கோலிக்கு கொழும்பு மைதானம் மிகவும் பிடித்த மைதானமாக உள்ளது. அவரை இந்த மைதானத்தில் வெளியே அமர வைக்கவே கூடாது. நான்காம், ஐந்தாம் இடத்தில் ஆடும் வீரர்கள் (கே எல் ராகுல், இஷான் கிஷன்) தங்கள் இடத்தை நிரந்தரமாக்கிக் கொள்ள விரும்புவார்கள். பந்துவீச்சாளர்கள் பும்ரா, பாண்டியா, சிராஜ் தங்களின் பத்து ஓவர்களை எந்தப் போட்டியிலும் முழுமையாக வீசவில்லை. எனவே, வீரர்களின் இந்த அமைப்பை மாற்ற முயற்சிக்காமல் அதே அணியை ராகுல் டிராவிட், ரோஹித் சர்மா ஆட வைக்க வேண்டும்" என்றார் சஞ்சய் பங்கர்.