IND vs BAN: வங்கதேச வீரர்களை வெறுப்பேற்றிய விராட் கோலி.. நாகினி டான்ஸால் ரசிகர்கள் குதூகலம்
சென்னை: இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி நாகினி நடனம் ஆடினார். அந்த வீடியோ காட்சி இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்க்ஸில் இமாலய இலக்கை நோக்கி ஆடி 280 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
முன்னதாக இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 376 ரன்கள் எடுத்தது. அடுத்து முதல் இன்னிங்க்ஸ் ஆடிய வங்கதேச அணி பேட்டிங்கில் மோசமாக சொதப்பியது. வெறும் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பும்ரா சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடிய இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்த போது கேப்டன் ரோஹித் சர்மா டிக்ளர் செய்தார்.

ரிஷப் பண்ட் 109 ரன்களும், சுப்மன் கில் 119 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி 514 ரன்கள் முன்னிலை பெற்றது. வங்கதேச அணிக்கு 515 ரன்கள் என்ற இமாலய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அடுத்து வங்கதேசம் பேட்டிங் ஆடியது. இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருந்த நிலையில், இந்திய அணியின் வீரர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தனர்.
குறிப்பாக மைதானத்தில் இருந்த ரசிகர்கள் "விராட் கோலி" என கோஷம் எழுப்பியபடி இருந்தனர். அப்போது விராட் கோலி தனது கையை பாம்பு போல வைத்துக் கொண்டு சில வினாடிகள் "நாகினி" நடனம் ஆடினார். அந்த காட்சி ரசிகர்கள் இடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. ஏனெனில், வங்கதேச அணிதான் இந்த நாகினி நடனத்தை கிரிக்கெட் உலகிற்கு அறிமுகம் செய்திருந்தது.
தங்கள் அணிக்குள் சில வீரர்களை கிண்டல் செய்யும் வகையில் நாகினி நடனத்தை வங்கதேச வீரர்கள் சிலர் ஆடி இருந்தனர். இலங்கை அணிக்கு எதிரான போட்டியின் போது சில இலங்கை வீரர்கள் தங்களை வங்கதேச வீரர்கள் கிண்டல் செய்வதாக எண்ணினர். அதனால் வங்கதேசம் அணியை வீழ்த்திவிட்டு நாகினி நடனத்தை ஆடி காண்பித்தனர்.
அப்போது முதல் இலங்கை அணிக்கும், வங்கதேச அணிக்கும் "நாகினி நடனப் போர்" நடைபெற்று வருகிறது. மேலும், வங்கதேச அணி என்றாலே நாகினி நடனம் என்ற ஒரு கேலி, கிண்டல் பேச்சுகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி பின்னடைவை சந்தித்து இருக்கும் நிலையில் விராட் கோலி நாகினி நடனத்தை ஆடி அந்த அணியின் வீரர்களை வெறுப்பேற்றி இருக்கிறார்.
பின்னர் இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் வங்கதேச அணி 234 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. அஸ்வின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக பந்து வீசி 6 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். முதல் இன்னிங்ஸில் அவர் விக்கெட் வீழ்த்தாத போதும் சதம் அடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் சதம் அடித்து இருந்தனர். பும்ரா முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார். ரவீந்திர ஜடேஜா முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களும் வீழ்த்தினார்.


Click it and Unblock the Notifications