சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். முதல் இன்னிங்ஸில் 6 ரன்களிலும், 2வது இன்னிங்ஸில் 17 ரன்களிலும் ஆட்டமிழந்த விராட் கோலி, இன்றைய நாளில் உடனடியாக நெட்ஸில் பயிற்சியை தொடங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கிட்டத்தட்ட 9 மாதங்களுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளார். கடைசியாக தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் விளையாடிய விராட் கோலி, அதன்பின் இந்திய மண்ணில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. 2வது குழந்தை பிரசவத்திற்காக விராட் கோலி விலகி இருந்தார்.

இதன்பின் ஐபிஎல் மற்றும் ஒயிட் பால் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வந்த விராட் கோலி, வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுத்துள்ளார். இதனால் விராட் கோலியின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி வெறும் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் 2வது இன்னிங்ஸில் சிறப்பாக தொடங்கி விராட் கோலி ரன்களை சேர்த்தார்.
ஆனால் மெஹதி ஹசன் பவுலிங்கில் 17 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறி ஏமாற்றினார். இதில் டிஆர்எஸ் எடுத்திருந்தால் விராட் கோலி தப்பித்திருக்கலாம். ஆனால் டிஆர்எஸ் கூட எடுக்க வேண்டாம் என்று விராட் கோலி முடிவு செய்தது ரசிகர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் கடந்த ஆண்டுகளில் எல்பிடபிள்யூ முறையில் விக்கெட் கொடுத்தாலே, விராட் கோலி உடனடியாக டிஆர்எஸ் எடுத்துவிடுவார்.
தற்போது கான்ஃபிடன்ஸ் லெவலில் குறைவாக இருப்பதே விராட் கோலி டிஆர்எஸ் எடுக்காமல் சென்றதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விராட் கோலி உடனடியாக நெட்ஸில் பயிற்சியை தொடங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் விராட் கோலி இந்திய அணி வீரர்கள் விளையாடிய போது பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டதில்லை.
ஆட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை தீவிரமாக கண்காணிப்பார். ஆனால் 3வது நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் இருவரும் விளையாடிய போது, விராட் கோலி த்ரோ டவுன் ஸ்பெஷலிஸ்ட் உடன் இணைந்து நெட்ஸில் பயிற்சியில் ஈடுபட்டார். இந்த வீடியோ வெளியாகி சோசியல் மீடியாவில் அவரது ரசிகர்கள் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.