துபாய்: 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிராக விளையாடியது. இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியின் பலவீனத்தை சரியாக பயன்படுத்திய வங்கதேச அணி அவரது விக்கெட்டை எளிதாக வீழ்த்தியது.
இந்தப் போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு 229 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி ஆடியபோது, ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 36 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து மூன்றாம் வரிசையில் இறங்கிய விராட் கோலி படு நிதானமாக ஆடினார். அவர் 38 பந்துகளில் 22 ரன்கள் மட்டும் சேர்த்து ஆட்டமிழந்தார். விராட் கோலி லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராகத் தடுமாறுகிறார் என்பதை வங்கதேச அணி சரியாகக் கணித்து, அவரை வீழ்த்தியது.
விராட் கோலி கடந்த 2024 ஆம் ஆண்டில் இருந்து ஒருநாள் போட்டிகளில் லெக் ஸ்பின்னர்களுக்கு எதிராக 51 பந்துகளைச் சந்தித்து 31 ரன்கள் எடுத்து ஐந்து முறை ஆட்டமிழந்துள்ளார். லெக் ஸ்பின்னர்களின் பந்துவீச்சில் இந்த காலகட்டத்தில் மட்டும் விராட் கோலியின் பேட்டிங் சராசரி 6.20 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 60.78 ஆகவும் உள்ளது.
வங்கதேச அணியின் ரிஷத் ஹொசைன் லெக் ஸ்பின்னர் ஆவார். அவரை வைத்துதான் அந்த அணி விராட் கோலியின் விக்கெட்டை வீழ்த்தியது. விராட் கோலி தொடர்ந்து வங்கதேச அணியின் சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் நிதானமாக ஆடி பின் 38 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின் இந்திய அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்தது. ஸ்ரேயாஸ் ஐயர் 15 ரன்களிலும், அக்சர் படேல் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருப்பதையே இந்த நிலை சுட்டிக் காட்டுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வரும் நிலையில், விராட் கோலி எப்படி அடுத்து வரும் போட்டிகளில் தனது பேட்டிங்கை மாற்றிக் கொள்ளப் போகிறார் என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.