மும்பை: இந்திய அணி சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் 2 - 0 என தோல்வி அடைந்திருந்தது. ஒரு போட்டியில் கூட இந்திய அணி வெற்றி பெறவில்லை. அந்த தொடரில் இந்திய அணி வீரர்கள் இலங்கை சுழற் பந்துவீச்சாளர்களின் பந்து வீச்சில் ரன் குவிக்க திணறினர். சுழற் பந்துவீச்சில் விக்கெட்களையும் வரிசையாக இழந்தனர்.
இதை அடுத்து இந்திய வீரர்களுக்கு சுழற் பந்துவீச்சில் பேட்டிங் செய்ய வரவில்லை என்ற விமர்சனம் வெளியானது. அதேபோல இலங்கை அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் அதிக அளவில் விக்கெட்டுகளை வீழ்த்திய போதும் இந்திய அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் அதே அளவுக்கான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அது குறித்து பேசி இருக்கிறார் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக்.

சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி ஆகியோரது காலத்தில் இந்திய வீரர்கள் எப்படி சுழற் பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் அதிகமாக ரன் குவித்தனர் என்ற விஷயத்தை அவர் விளக்கி இருக்கிறார். மேலும், சுழற் பந்துவீச்சாளர்கள் ஏன் விக்கெட் வீழ்த்துவதில்லை என்பது குறித்தும் விளக்கினார். இது குறித்து வீரேந்தர் சேவாக் பேசியதாவது, "இந்திய சுழற் பந்து வீச்சாளர்கள் தடுமாற முக்கிய காரணம் அவர்கள் அதிக அளவிலான டி20 போட்டிகள் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் ஆடுவது தான். டி20 போட்டியில் மொத்தமே 24 பந்துகள் மட்டும் நீங்கள் பந்து வீசினால் போதுமானது. அதிலும் சுழற் பந்துவீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்த வேண்டும் என்ற நோக்கத்தை காட்டிலும் அதிக ரன் கொடுக்காமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பந்து வீசுவார்கள். அதனால், பந்து காற்றில் பறந்து வராது. அது ஒரு முக்கிய காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்."
"இந்திய வீரர்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் மிக குறைந்த அளவில்தான் விளையாடுகிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டை விட உள்ளூர் கிரிக்கெட்டில் தான் அதிக சுழற் பந்துவீச்சை நாம் ஆட வேண்டி இருக்கும். அதுவும் ஒரு காரணமாக இருக்கும். இந்தியாவில் தற்போது ஒரு தரமான ஸ்பின்னர் கூட இல்லை என்று நினைக்கிறேன். பந்தை காற்றில் பறக்க விட்டு விக்கெட் வீழ்த்தும் ஸ்பின்னர்களை நான் பார்க்கவில்லை." என்றார் சேவாக்.
மேலும், இந்திய பேட்ஸ்மேன்கள் சுழற் பந்துவீச்சில் தடுமாறுவது குறித்து சேவாக் பேசுகையில், "எங்கள் காலத்தில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லக்ஷ்மன், யுவராஜ் சிங் என நாங்கள் அனைவரும் உள்ளூர் கிரிக்கெட்டை ஆடினோம். அது ஒரு நாள் போட்டியாக இருந்தாலும் சரி, நான்கு நாள் போட்டியாக இருந்தாலும் சரி நாங்கள் அதிக அளவில் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடினோம். அந்த போட்டிகளில் நாங்கள் அதிக சுழற் பந்துவீச்சாளர்களை சந்தித்தோம். ஆனால், இன்று நெருக்கமாக போட்டிகள் நடைபெற்று வருவதால் இப்போது உள்ள வீரர்களுக்கு உள்ளூர் போட்டிகளில் குறைந்த நேரமே கிடைக்கிறது. இன்று நிறைய டி20 தொடர்கள் உள்ளன. அதனால், சுழற் பந்து வீச்சுக்கு எதிராக ஆடும் திறன் குறைந்து கொண்டே வருகிறது." என்றார் வீரேந்தர் சேவாக்.
தற்போது பிசிசிஐ அனைத்து இந்திய அணி வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என கட்டாயப்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது. மூத்த வீரர்கள் ஆன ரோஹித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகியோரை தவிர்த்து மற்ற வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் ஆட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.