நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பைக்கான அணித் தேர்வில் பெரிய தவறு நடந்திருப்பதாக இந்திய அணியின் முதல் பயிற்சி போட்டிக்கு முன்பே விமர்சனம் எழத் துவங்கி உள்ளது.
2024 டி20 உலகக் கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. வெஸ்ட் இண்டீஸ்-இல் உள்ள ஆடுகளங்களில் அதிக ரன்கள் குவிக்க முடியாது, அவை ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற ஒரு பிம்பம் உள்ளது. ஆனால், அது அமெரிக்காவில் உள்ள பிட்ச்களில் அதற்கு நேர்மாறான சூழல் இருப்பதாக தற்போது கூறப்படுகிறது.

இந்தியா - வங்கதேசம் மோத உள்ள முதல் பயிற்சிப் போட்டி நியூயார்க் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதே மைதானத்தில் தான் இந்தியா தனது குரூப் சுற்று போட்டிகள் அனைத்திலும் விளையாட உள்ளது. இந்த மைதானத்தின் பிட்ச்சை கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் நேற்று பார்வையிட்டனர். அப்போது பிட்ச் கடினமாக இருந்ததாகவும், இது பேட்டிங் செய்ய ஏற்றது எனவும் கூறப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் சுழற் பந்துவீச்சுக்கு அதிகம் ஒத்துழைக்காது என தெரிகிறது. அப்படி என்றால் இந்திய அணியில் நான்கு சுழற் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்தது தேவையில்லாத ஒன்று.
ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்சர் பட்டேல் மற்றும் சாஹல் என நான்கு சுழற் பந்துவீச்சாளர்கள் 15 பேர் கொண்ட உத்தேச அணியில் இடம் பெற்று உள்ளனர். இதன் காரணமாக மூன்று வேகப் பந்துவீச்சாளர்களுக்கு மட்டுமே அணியில் இடம் கிடைத்தது. பும்ரா, முகமது சிராஜ் மற்றும் அர்ஷ்தீப் சிங் என மூன்று முழு நேர வேகப் பந்துவீச்சாளர்களே 15 பேர் கொண்ட உத்தேச அணியில் இடம் பெற்றனர். ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே என இரண்டு பகுதி நேர வேகப் பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், ஸ்பின் பந்துவீச்சுக்கு சாதகமான சூழல் இல்லை என்றால் ஒரு போட்டியில் இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு மேல் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். நான்காவது சுழற் பந்துவீச்சாளருக்கு பதிலாக ஒரு முழு நேர வேகப் பந்துவீச்சாளரை உத்தேச அணியில் சேர்த்து இருக்கலாம். அதன் மூலம் சில போட்டிகளில் நான்கு வேகப் பந்துவீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்த வாய்ப்பு கிடைத்திருக்கும். அந்த வகையில் இந்திய அணித் தேர்வில் தவறு நடந்திருப்பதாக விமர்சனம் இருந்துள்ளது.