நியூயார்க் : 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தனது பயிற்சி போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக மோதியது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்றார். அவர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.
ஏன் முதலில் பேட்டிங் செய்யப் போகிறீர்கள்? என வர்ணனையாளர் கேட்டபோது அதற்கு எந்த முக்கியமான காரணமும் இல்லை என அவர் தெரிவித்தார். இது பயிற்சி போட்டி என்பதால் 11 வீரர்கள் மட்டுமின்றி, கூடுதல் வீரர்களும் கூட போட்டியில் பங்கேற்கலாம். அந்த வகையில் இந்திய அணி 14 வீரர்களுடன் இந்த போட்டியில் களமிறங்கியது. ஆனால், பேட்டிங்கில் 11 வீரர்களும், ஃபீல்டிங்கில் 11 வீரர்களும் மட்டுமே பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கோப்பைக்கு 15 பேர் கொண்ட உத்தேச அணி அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அதில் ஒரு வீரருக்கு மட்டும் அணியில் இடம் அளிக்கப்படவில்லை. அது விராட் கோலி. அவர் நேற்று தான் அமெரிக்கா சென்றடைந்தார். அதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவரைத் தவிர மற்ற 14 வீரர்களும் இந்த பயிற்சிப் போட்டியில் பங்கேற்றனர்.
மறுபுறம் வங்கதேச அணியில் 13 வீரர்கள் பங்கேற்றனர். டஸ்கின் அஹமது மற்றும் முஸ்தாபிசூர் ரஹ்மான் ஆகிய இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டது. இந்தப் போட்டி நடைபெறும் நியூயார்க் மைதானத்தில் தான் இந்திய அணி தனது குரூப் சுற்றின் 4 போட்டிகளிலும் விளையாட உள்ளது. எனவே இந்த போட்டியில் பிட்ச் குறித்து இந்திய அணி அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
இரு அணி வீரர்கள் விவரம் :
வங்கதேசம் (பேட்டிங் 11, பீல்டிங் 11): லிட்டன் தாஸ், சௌமியா சர்க்கார், நஜ்முல் ஹொசைன் ஷான்டோ (கேப்டன்), தவ்ஹித் ஹிரிடோய், ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி (விக்கெட் கீப்பர்), மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், ஷோரிபுல் இஸ்லாம், தன்சித் ஹசன், டான்சிம் ஹசன் ஹசன் சாகிப், தன்வீர் இஸ்லாம்
இந்தியா (பேட்டிங் 11, பீல்டிங் 11): ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் , அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்