ஹைதராபாத்: இந்திய டி20 அணியில் பல ஆண்டுகளாக ஆடிவரும் வாஷிங்டன் சுந்தருக்கு நியாயமே இல்லாத வகையில் பந்து வீச சரியான வாய்ப்பு கொடுக்காமல் அலைக்கழிப்பு சம்பவம் நடந்து இருக்கிறது. அதை சுட்டிக்காட்டி பல ரசிகர்களும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரை விமர்சித்து வருகின்றனர்.
வங்கதேச அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மூன்று போட்டிகளிலும் வாஷிங்டன் சுந்தர் அணியில் இடம் பெற்றார். அவர் வலது கை சுழற் பந்துவீச்சாளர் என்பதோடு இடது கை பேட்ஸ்மேன் ஆகவும் இருப்பதால் ஆல் ரவுண்டராக இந்த தொடரின் மூன்று போட்டிகளிலும் இடம் பெற்றார். ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரது இடத்தை நிரப்பும் வகையில் செயல்பட்டார் சுந்தர்.

இந்த மூன்று போட்டிகளிலும் சுந்தர் சிறப்பாக பந்து வீசிய போதும் அவருக்கு அதிக ஓவர்கள் பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதிலும் விக்கெட் வீழ்த்திய பின்னரும் அவருக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கவில்லை கேப்டன் சூர்யகுமார் யாதவ். இந்த தொடரின் முதல் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஆறாவது பந்துவீச்சாளராகவே பயன்படுத்தப்பட்டார். அந்தப் போட்டியில் அவருக்கு இரண்டு ஓவர்கள் மட்டுமே பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அந்த இரண்டு ஓவர்களில் அவர் 12 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
அடுத்து இரண்டாவது டி20 போட்டியில் அவருக்கு பவர் பிளே ஓவர்களில் பந்து விச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அவர் வீசிய ஒரு ஓவரில் நான்கு ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அவர் விக்கெட் வீழ்த்திய போதும் அதன் பின் அவருக்கு ஓவர் அளிக்கப்படவில்லை. அடுத்து மூன்றாவது டி20 போட்டியிலும் வாஷிங்டன் சுந்தர் பவர் பிளேவில் ஒரு ஓவர் வீசி முந்தைய போட்டியைப் போலவே நான்கு ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தி இருந்தார்.
ஆனால், அதன் பின் அவருக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதே சமயம், மற்றொரு தமிழக சுழற் பந்துவீச்சாளரான வருண் சக்கரவர்த்திக்கு மூன்று போட்டிகளிலும் நான்கு ஓவர்களையும் முழுமையாக வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக 52 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அனுபவம் உள்ள அவருக்கு முழுமையாக நான்கு ஓவர்களை வீச விடாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த மூன்று போட்டிகளில் பகுதி நேர பந்துவீச்சாளர்களான நிதிஷ்குமார் ரெட்டி, அபிஷேக் ஷர்மா, ரியான் பராக் ஆகியோருக்கு பந்து வீச வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்திய அணியில் பகுதி நேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி வருவதால் அவருக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என விமர்சகர்கள் இதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
ஆனாலும், அணியின் முதன்மை பந்து வீச்சாளர் சிறப்பாக பந்து வீசும் போது ஒரு ஓவருடன் அவரை நிறுத்திவிட்டு பகுதி நேர பந்து வீச்சாளர்களுக்கு அதிக ஓவர்களை அளிக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதன் மூலம் வாஷிங்டன் சுந்தரை டி20 அணியில் இருந்து நீக்கும் முயற்சியா இது? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.