சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ள நிலையில், சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் பயிற்சி முகாமில் இந்திய வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதிலும் நட்சத்திர வீரர் விராட் கோலி 45 நிமிடங்கள் தொடர் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் செப்.19ஆம் தேதி நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சீனியர் வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் உள்ளிட்ட பலரும் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் நேற்று இந்திய வீரர்கள் அனைவரும் சென்னைக்கு வந்திறங்கினர்.

நட்சத்திர வீரர் விராட் கோலி லண்டனில் இருந்து நேரடியாக சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தார். அதேபோல் ரோஹித் சர்மா, அபிஷேக் நாயர், கவுதம் கம்பீர் உள்ளிட்டோர் மும்பையில் இருந்து சென்னை வந்தனர். துலீப் டிராபியில் விளையாடிய கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், யாஷ் தயாள், துருவ் ஜுரெல், ஜெய்ஸ்வால், அக்சர் படேல், குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் பெங்களூரில் இருந்து சென்னை வந்தனர்.
சர்ஃபராஸ் கான் மட்டும் 2வது துலீப் டிராபி போட்டிக்கு பின் இந்திய அணியுடன் இணையலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய அணி வீரர்களுக்கான 5 நாள் பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தொடங்கியது. இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கு முதல் டெஸ்ட் தொடர் என்பதால், அவர் கூடுதல் கவனத்துடன் இருக்கிறார்.
அதேபோல் புதிய பயிற்சியாளர்களான அபிஷேக் நாயர், மோர்னே மோர்கல் மற்றும் ரியான் டென்டஸ்காட்டே ஆகியோரை புரிந்து கொள்ளும் வகையில் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாமில் 9 மாதங்களுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடவுள்ள நட்சத்திர வீரர் விராட் கோலி முதல் நாளிலே பீஸ்ட் மோடில் செயல்பட்டுள்ளார்.
ரெட் பால் கிரிக்கெட் மோடுக்கு திரும்புவதற்காக தொடர்ச்சியாக 45 நிமிடங்கள் விராட் கோலி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். ஏனென்றால் கடைசியாக விராட் கோலி கடந்த டிசம்பரில் நடந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தான் விளையாடி இருந்தார். 2வது குழந்தை பிறப்புக்காக லண்டன் சென்ற விராட் கோலி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை.
சேப்பாக்கம் மைதானத்தில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி ஒரு சதம் உட்பட 267 ரன்களை விளாசியுள்ளார். இதனால் விராட் கோலியின் பேட்டிங் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேபோல் நட்சத்திர வீரர் பும்ராவும் தீவிர பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏனென்றால் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பின் முதல்முறையாக பும்ரா இந்திய அணிக்காக விளையாடவுள்ளார்.
சுமார் 2 மாதங்களுக்கு மேல் ஓய்வில் இருந்த பும்ரா, கடந்த வாரம் பவுலிங் பயிற்சியை தொடங்கியிருந்தார். இந்த நிலையில் முதல் நாள் பயிற்சி முகாமில் பும்ராவின் செயல்பாடுகள் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மோர்னே மோர்கல் பயிற்சியின் கீழ் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் எப்படி செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.