ஐதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இளம் வீரர் ஹர்சித் ராணா இடம்பெறவில்லை. இதற்கு காரணம் குறித்து பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், கேகேஆர் அணியின் ரசிகர்கள் பலரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
வங்கதேச அணிக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ள நிலையில், கடைசி டி20 போட்டியில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்காக அசத்திய ஹர்சித் ராணா இந்திய அணியில் அறிமுகம் செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்பின் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அர்ஷ்தீப் சிங்கிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக ரவி பிஷ்னாய் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஏனென்றால் வேகப்பந்துவீச்சாளர் இடத்தில் எதற்காக ஸ்பின்னரை விளையாட வைக்க வேண்டும் என்று கேள்வி எழுந்தது. இந்த நிலையில் ஹர்சித் ராணா இந்திய அணியில் அறிமுகம் செய்யப்படாதது குறித்து பிசிசிஐ தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், இந்திய இளம் வீரர் ஹர்சித் ராணா 3வது டி20 போட்டியில் விளையாடுவதற்கு தேர்வாகவில்லை.
வைரல் காய்ச்சல் காரணமாக ஓய்வில் இருப்பதாகவும், இந்திய அணியுடன் மைதானத்திற்கு கூட பயணிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணி ஒரேயொரு மாற்றம் மட்டும் பிளேயிங் லெவனில் செய்துள்ளது. இதன் காரணமாக கேகேஆர் அணியின் உரிமையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருப்பார்கள்.
கடந்த ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 19 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ஹர்சித் ராணா. ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 2 அன்-கேப்ட் வீரர்களை தக்க வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய அணியில் ஹர்சித் ராணா அறிமுகம் செய்யப்படாததால், அவர் அன்-கேப்ட் வீரராகவே இருக்கிறார்.
இதனால் அக்.31ஆம் தேதிக்குள் கேகேஆர் அணி ரிடென்ஷன் பட்டியலை வெளியிடும் போது, நிச்சயம் ஹர்சித் ராணாவை அன்-கேப்ட் வீரராக தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் ரூ.4 கோடி ஊதியத்திற்கு ஹர்சித் ராணா ஒப்புக் கொள்வாரா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.