டெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிங்கு சிங் 26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார். அரைசதம் அடித்த பின், அவர் தனது கைகளில் குத்தியுள்ள புதிய டாட்டூவை காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டது ஏன் என்று ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.
வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்கள் குவித்துள்ளது. இந்த போட்டியில் பவர் பிளேவிலேயே இந்திய அணி 41 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, இளம் வீரரான நிதிஷ் குமார் ரெட்டியுடன் இணைந்து அதிரடி வீரர் ரிங்கு சிங் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

நிதிஷ் குமார் ரெட்டி சில நிமிடங்கள் நிதானமாக ஆடிய போது, ரிங்கு சிங் எந்த பயமும் இல்லாமல் பவுண்டரி, சிக்சர் என்று விளாசி தள்ளினார். அதுமட்டுமல்லாமல் கொஞ்சம் பதற்றத்துடன் இருந்த நிதிஷ் ரெட்டிக்கு சிறந்த அறிவுரையை வழங்கியும் உறுதுணையாக இருந்தார். கிடைத்த பந்துகளில் எல்லாம் சிக்சர், பவுண்டரியை ரிங்கு சிங் விளாசி தள்ளினார்.
வங்கதேச வீரர்களின் கவனம் நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஹர்திக் பாண்டியாவின் பக்கம் இருந்த போது, சைலண்ட்டாக ரிங்கு சிங் 26 பந்துகளில் 3 சிக்ஸ், 5 பவுண்டரிகள் உட்பட அரைசதத்தை எட்டினார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரிங்கு சிங் அடிக்கும் 3வது அரைசதம் இதுவாகும். பவர் பிளே ஓவர்களில் களமிறங்கிய ரிங்கு சிங், 17வது ஓவர் வரை களத்திலேயே இருந்தார்.
ஹசன் ஷகிப் வீசிய பந்தில் டாப் எட்ஜாகி பறந்த பந்து, நேராக தலைக்கு பின் பவுண்டரிக்கு வெளியில் சென்று விழுந்தது. இதனால் அரைசதத்தை எட்டிய ரிங்கு சிங், தனது கைகளில் பதிவிட்டுள்ள புதிய டாட்டூவை காட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ரிங்கு சிங் இந்த டி20 தொடருக்கு முன்பாக தனது கைகளில் "God's Plan" ( கடவுளின் திட்டம் ) என்று டாட்டூ குத்தி இருந்தார்.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியின் போது கடைசி 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசி கேகேஆர் அணியை வெற்றிபெற வைத்தார். அப்போது முதல் ரிங்கு சிங்கின் மொத்த வாழ்க்கையும் மாறியது. இதனை குறிக்கும் வகையில், அது கடவுளின் திட்டம் என்று ரிங்கு சிங் டாட்டூ குத்தியுள்ளார். இதனால் அரைசதம் அடித்த பின் டாட்டூவை காட்டி ரிங்கு சிங் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
தற்போது ரிங்கு சிங் குத்தியுள்ள டாட்டூ, ரசிகர்களிடையே ட்ரெண்டாகி வருகிறது. அதேபோல் முதல் டி20 போட்டியில் பேட்டிங் செய்ய ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது 2வது டி20 போட்டியில் சிக்கலான நேரத்தில் களமிறங்கி ரிங்கு சிங் இந்திய அணியின் ஃபினிஷர் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார்.