குவாலியர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள 2 தமிழக வீரர்களான வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 3 ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்கள் இருப்பதால், யாரை கவுதம் கம்பீர் தேர்வு செய்வார் என்ற விவாதமும் தொடங்கியுள்ளது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி குவாலியரில் நாளை தொடங்கவுள்ளது. டெஸ்ட் தொடரை எப்படி அசாத்தியமாக விளையாடி இந்திய அணி வென்றதோ, அதேபோல் டி20 தொடரையும் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள சூர்யகுமார் யாதவ், சொந்த மண்ணில் முதல்முறையாக வழிநடத்தவுள்ளார்.

இதனால் சூர்யகுமார் யாதவின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வங்கதேச டி20 தொடருக்கான அணியில் பல இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டின் 2 தரமான ஸ்பின்னர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஸ்பின் ஆல்ரவுண்டரான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஸ்பின்னரான வருன் சக்கரவர்த்தி இருவரும் தேர்வாகியுள்ளனர்.
இதில் வருண் சக்கரவர்த்தி கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார். இதனால் அவரின் மேஜிக்கை நிகழ்த்த இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேகேஆர் அணியில் இருந்து மட்டும் ஹர்சித் ராணா, வருண் சக்கரவர்த்தி, ரிங்கு சிங் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் கவுதம் கம்பீர் மூவருக்கும் வாய்ப்பளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடதுகை பேட்ஸ்மேன் மற்றும் ஆஃப் ஸ்பின்னர் என்பதால் வாஷிங்டன் சுந்தருக்கு நிச்சயம் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும். ஆனால் மீதமுள்ள ரவி பிஷ்னாய் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பாக ஜிம்பாப்வே டி20 தொடரில் ரவி பிஷ்னாய் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.
5 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதேபோல் ஐசிசி டி20 பவுலர்களுக்கான தரவரிசையில் 11வது இடத்தில் இருக்கிறார். இதனால் வருண் சக்கரவர்த்திக்கு முதல் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைப்பது சந்தேகம் தான். ஆனால் சுனில் நரைன் பாணியிலான பவுலர் இந்திய அணிக்கு தேவை என்பதால், பயிற்சியாளர் கவுதம் கம்பீர் முடிவு எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது.
ஏனென்றால் கேகேஆர் அணியின் முன்னணி ஸ்பின்னராக வருண் சக்கரவர்த்தி விளையாடி வருகிறார். இவரின் பவுலிங்கில் ரன்கள் சேர்க்க முடியாது என்பதோடு, அட்டாக் செய்ய முயன்றால் நிச்சயம் விக்கெட் கிடைக்கும். அதேபோல் பவர் பிளே, மிடில் ஓவர்கள், டெத் ஓவர்கள் என்று ஆட்டத்தின் எந்த சூழலிலும் வருண் சக்கரவர்த்தியை பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.