ஆன்டிகுவா : வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியே இந்திய அணியின் அதிரடி வீரர் சிவம் துபேவுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 4 போட்டிகளில் சிவம் துபே விளையாடியுள்ள நிலையில், மொத்தமாக 44 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று மூன்றிலும் சொதப்புவதால், சிவம் துபே செயல்பாடுகள் மீது பல்வேறு தரப்பினரின் கவனம் குவிந்துள்ளது.
டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் வங்கதேசம் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடவுள்ளது. இதுவரை ஐசிசி தொடர்களில் வங்கதேசம் அணியுடன் விளையாடிய 13 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக வங்கதேசம் அணி இந்திய அணிக்கு கடுமையான சவாலை அளித்து வருகிறது.

கடந்த டி20 உலகக்கோப்பையில் கூட மழை பெய்த பின் கேஎல் ராகுல் அடித்த தரமான ரன் அவுட் காரணமாகவே ஆட்டம் இந்திய அணி பக்கம் திரும்பியது. இல்லையென்றால் லிட்டன் தாஸ் ஆட்டத்தை மொத்தமாக முடித்திருப்பார். இதனால் வங்கதேசம் அணியை வீழ்த்துவது இந்திய அணிக்கு எளிதாக இருக்காது என்று பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி வீரர் சிவம் துபேவின் ரோல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆன்டிகுவா மைதானத்தை பொறுத்தவரை ஸ்பின்னர்களுக்கு உதவி இருக்கும். ஏற்கனவே இந்திய அணி 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கி வரும் சூழலில், வங்கதேசம் அணியும் குறைந்தது 2 ஸ்பின்னர்களுடன் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஏற்கனவே சீனியர் வீரரான ஷகிப் அல் ஹசன் விளையாடுவது நிச்சயம் என்று பார்க்கப்படும் சூழலில், மற்றொரு ஸ்பின்னராக ரிஷாத் ஹொசைன் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷகிப் அல் ஹசன் பவுலிங்கில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் தடுமாறியதில்லை என்றாலும், அவரால் எளிதாக ரன் குவிப்பை தடுத்து நிறுத்த முடியும். இதனால் பவர் பிளே ஓவர்களுக்கு பின் அட்டாக்கில் வரும் ஸ்பின்னர்களை பொளந்து கட்ட சிவம் துபேவிற்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று பார்க்கப்படுகிறது. இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள சிவம் துபே 44 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார்.
சிஎஸ்கே அணிக்காக அபார சிக்சர்களை விளாசிய சிவம் துபேவால், இந்திய அணியில் அதே மேஜிக்கை நிகழ்த்த முடியாமல் தடுமாறி வருகிறார். இந்த போட்டியிலும் சிவம் துபே தனது திறமையை நிரூபிக்கவில்லை என்றால், பெஞ்சில் அமர்ந்திருக்கும் சஞ்சு சாம்சன் அவரது இடத்திற்கு கொண்டு வரப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனால் சிவம் துபேவுக்கு இதுவே கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.