மும்பை: துலீப் ட்ராபி டெஸ்ட் தொடரில் முகமது ஷமியின் பெயர் இடம் பெறாதது ஏன்? என்பது குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ள இந்திய வீரர்கள் அனைவரும் துலீப் ட்ராபி உள்ளூர் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளனர்.
நான்கு அணிகள் மோதும் இந்த டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரைத் தவிர அனைத்து இந்திய வீரர்களும் இடம் பெற்று இருக்கின்றனர். ஆனால், முகமது ஷமியின் பெயர் இதில் இடம் பெறவில்லை. முன்னதாக வங்கதேச டெஸ்ட் தொடரில் முகமது ஷமி விளையாடக் கூடும் என தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் கூறி இருந்தார். ஆனால், இப்போதைக்கு அவரை ஓய்வில் வைத்திருக்க முடிவு செய்துள்ளது பிசிசிஐ.

2023 ஒரு நாள் போட்டி உலகக் கோப்பை தொடருக்கு பின் தனது காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார் முகமது ஷமி. அப்போதிருந்து ஓய்வில் இருந்தவர், சில வாரங்களுக்கு முன்பு தனது பயிற்சியை துவக்கினார். அதனால் அவர் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால், வங்கதேச டெஸ்ட் தொடருக்கு பின் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியா முன்னிலையில் இருக்க வேண்டும் என்றால், அந்த எட்டு போட்டிகளிலும் அதிக வெற்றிகளை பெறுவது அவசியம்.
அந்த இரண்டு அணிகளும் கடினமான அணிகள் என்பதால் முகமது ஷமியை முக்கியமான அந்த இரண்டு தொடர்களிலும் முழுமையாக பயன்படுத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அதனால், தற்போது சிகிச்சையிலிருந்து மீண்டு வந்துள்ள முகமது ஷமியை வங்கதே டெஸ்ட் தொடரில் பயன்படுத்தி அதிக அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்ற முடிவில் இருக்கிறது.
அதன் காரணமாகவே அவரை துலீப் ட்ராபி டெஸ்ட் தொடரிலும் பங்கேற்க வேண்டாம் என அறிவுறுத்தி இருக்கிறது. அதற்கு பதிலாக, அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் ரஞ்சி ட்ராபி தொடரில் பெங்கால் அணிக்காக இரண்டு போட்டிகளில் விளையாட இருக்கிறார். அதன் பின்னர் அவர் நியூசிலாந்து தொடரில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு வேகப்பந்துவீச்சாளரான பும்ராவுக்கும் வங்கதேச டெஸ்ட் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.