மும்பை : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வங்கதேசம் அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த நிலையில் இந்த போட்டியில் பங்கேற்கும் ரோகித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா சேர்க்கப்பட்டிருக்கிறார். முதலில் பும்ராவுக்கு இந்த தொடரில் ஓய்வு வழங்க தான் பிசிசிஐ முடிவெடுத்து இருந்தது.

ஆனால் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் வங்கதேசம் சிறப்பாக செயல்பட்டதால் வேறு வழி இன்றி பும்ராவை தற்போது பிசிசிஐ இந்திய அணியில் சேர்த்து இருக்கிறது. வங்கதேச வீரர்கள் பலம் வாய்ந்த பாகிஸ்தானை சுக்கு நூறாக உடைத்து தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வென்று இருக்கிறார்கள்.
மேலும் வங்கதேச அணியின் பேட்டிங்கிலும் தற்போது நல்ல முன்னேற்றத்தை கண்டு இருக்கிறது. இதனால் பும்ரா இல்லாமல் ஓவர் கான்ஃபிடன்ஸில் களம் இறங்கினால், நிச்சயம் அடி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் வங்கதேசத்தை சாதாரணமாக நினைத்து விடக்கூடாது என்று உடனே தேர்வுக்குழு தலைவர் அகார்கர், பும்ராவை அணியில் சேர்த்திருக்கிறார்.
அது மட்டுமில்லாமல் முகமது சமி தற்போது முழு உடல் தகுதியை எட்டவில்லை. இதனால் அவர் வங்கதேச தொடரில் பெரிய அளவில் ஜொலிக்க மாட்டார் என்று தேர்வுக்குழு முன்பே கணித்து இருக்கிறது. இதன் காரணமாக தான் பும்ராவை இந்திய அணியில் அகார்கர் கம்பீர் குழு சேர்த்திருக்கிறது. அது மட்டுமல்லாமல் பும்ரா டெஸ்ட் சீசனுக்கு தயாராக வேண்டும்.

அடுத்தடுத்து நியூசிலாந்து ஆஸ்திரேலியா போன்ற பெரிய அணிகளுடனான தொடர் இருக்கிறது. இதனால் வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் பும்ராவுக்கு ஒரு நல்ல பயிற்சிக் களமாக அமையும். இந்த நிலையில் பும்ராவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது குறித்து பிசிசியை எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.