ஆன்டிகுவா : இந்திய அணிக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி வெற்றிபெற 197 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய அணி வீரர்களில் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் 50 ரன்களை விளாசி அசத்தியுள்ளார். அனைத்து வீரர்களும் 30 ரன்களை எட்டிய பின் ஆட்டமிழந்த நிலையில், பொறுப்புடன் விளையாடி ஹர்திக் பாண்டியா ஃபினிஷிங் செய்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேசம் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா - விராட் கோலி கூட்டணி தொடக்கம் கொடுத்தது. வங்கதேசம் அணி ஸ்பின்னரான மெஹதி ஹசனை வைத்து அட்டாக்கை தொடங்கியது. இதனை பயன்படுத்தி ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் பவுண்டரி, சிக்சரை விளாசி அசத்தினார்.

முதல் விக்கெட்டுக்கு 39 ரன்கள் சேர்த்த நிலையில், கேப்டன் ரோகித் சர்மா 23 ரன்களில் ஆட்டமிழக்க, ரிஷப் பண்ட் களம் புகுந்தார். இதன்பின் ஆட்டத்தின் கட்டுப்பாட்டை விராட் கோலி கையில் எடுத்து பொளந்து கட்டினார். விராட் கோலியின் அதிரடியால் 6 ஓவர்களில் இந்திய அணி 53 ரன்கள் சேர்த்தது. இந்த டி20 உலகக்கோப்பையில் இந்திய அணியின் அதிகபட்ச பவர் பிளே ஸ்கோர் இதுதான். தொடர்ந்து ரிஷாத் ஹொசைன் பவுலிங்கில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி உட்பட 15 ரன்கள் விளாசப்பட்டது.
இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்த போது, தான்சிம் ஹசன் பவுலிங்கில் விராட் கோலி எதிர்பாராத வகையில் 37 ரன்களில் போல்டாகி வெளியேறினார். பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து தொடங்க, அடுத்த பந்திலேயே விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணி 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் ரிஷப் பண்ட் அதிரடியை கையில் எடுத்து கொண்டார். முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வீசிய 11வது ஓவரில் 4,6,4 என்று 14 ரன்களை விளாசினார் ரிஷப் பண்ட்.
தொடர்ந்து ரிஷாத் ஹொசைன் பந்தில் 6,4 விளாசி அசத்திய அவர், அடுத்த பந்திலேயே ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயன்று 36 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹர்திக் பாண்டியா - சிவம் துபே இருவரும் இணைந்து 15 ஓவர்களில் இந்திய அணியின் ஸ்கோரை 134 ரன்களாக உயர்த்தினர். அப்போது சிவம் துபே ஓவருக்கு ஒரு சிக்சரை விளாசி அதிரடியில் இறங்க, இந்திய ரசிகர்கள் உற்சாகமாகினர். அதிரடியாக ஆடிய அவர் 24 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதன்பின் ஹர்திக் பாண்டியா - அக்சர் படேல் கூட்டணி இணைந்து ஃபினிஷிங் ரோலை எடுத்து கொண்டனர். 19 ஓவர்களில் 178 ரன்கள் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், கடைசி ஓவரை வீச முஸ்தஃபிசுர் ரஹ்மான் அழைக்கப்பட்டார். இதில் 3 பவுண்டரிகள் உட்பட 18 ரன்கள் விளாசப்பட்டது. கடைசி பந்தில் பவுண்டரி அடித்த ஹர்திக் பாண்டியா 27 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 196 ரன்களை குவித்துள்ளது. ஆன்டிகுவா மைதானத்தில் அடிக்கப்பட்ட அதிகபட்ச டி20 ஸ்கோர் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.