துபாய்: வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. சீனியர் வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் ஆட்டமிழந்து வெளியேறிய போதும், ஒற்றை வீரராக களத்தில் நின்று சதம் விளாசி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி விளையாடியது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச கேப்டன் ஷான்டோ பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய வங்கதேசம் அணி 49.4 ஓவர்களில் 228 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக ஹிருதாய் 100 ரன்களை விளாசினார். இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.

பவர் பிளேவில் வழக்கம் போல் ரோஹித் சர்மா பொளந்து கட்ட, இந்த ஆட்டத்தில் சுப்மன் கில்லும் சேர்ந்து பவுண்டரியாக விளாசினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் எகிறியது. சிறப்பாக ஆடிய ரோஹித் சர்மா 36 பந்துகளில் 41 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின் களமிறங்கிய விராட் கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
10 ஓவர்களுக்கு பின் ஸ்பின்னர்கள் அட்டாக்கில் வந்தனர். இதனால் ஆடுகளமும் பவுலர்களுக்கு உதவி செய்ய தொடங்கியது. பனிப்பொழிவும் வராத காரணத்தால் ரன்களை நிதானமாக சேர்க்க வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய அணி தள்ளப்பட்டது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 69 பந்துகளில் அரைசதம் கடக்க, மறுமுனையில் ஸ்பின்னர்களிடம் திணறிய விராட் கோலி 22 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
தொடர்ந்து வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 15 ரன்களிலும், அக்சர் படேல் 8 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் வந்த கேஎல் ராகுல் - சுப்மன் கில் கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது. 9 ரன்களின் போது கேஎல் ராகுல் கொடுத்த கேட்சை ஜேக்கர் அலி கோட்டைவிட்டார். இதனை பயன்படுத்தி கொண்ட கேஎல் ராகுல், பின்னர் எந்த ரிஸ்கையும் எடுக்கவில்லை.
இந்தப் பக்கம் சுப்மன் கில் தேவைக்கேற்ப பவுண்டரிகளை விளாசி ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் கொண்டு சென்றார். இந்திய அணியின் வெற்றிக்கு வெறும் 18 ரன்களே தேவை என்ற நிலையில், சுப்மன் கில் அபாரமாக சிக்சர் விளாசி 90 ரன்களுக்கு மேல் சென்றார். பின்னர் நிதானமாக ஒரு ரன்னை தட்டிவிட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 8வது சதத்தை நிறைவு செய்தார்.
இதனைத் தொடர்ந்து கேஎல் ராகுல் சிக்சர் விளாசி ஃபினிஷிங் டச் கொடுத்தார். இறுதியாக இந்திய அணி 46.3 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 101 ரன்களும், கேஎல் ராகுல் 41 ரன்களும் சேர்த்தனர். இந்த வெற்றியின் காரணமாக இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.