மும்பை: வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 21 மாதங்களுக்கு பின் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்துள்ளார். அதேபோல் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தயாளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசம் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. அதன்பின் செப்டம்பர் 27ஆம் தேதி கான்பூர் மைதானத்தில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந்த நிலையில் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 16 பேர் கொண்ட இந்திய அணியை அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய தேர்வுக் குழு செய்துள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான் உள்ளிட்டோர் பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல் விக்கெட் கீப்பர்களாக ரிஷப் பண்ட், துருவ் ஜுரெல் ஆகிய இருவரும் தேர்வாகியுள்ளனர். ஸ்பின்னர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய 4 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது சிராஜ், பும்ரா, ஆகாஷ் தீப் மற்றும் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தயாள் புதிதாக இடம் பிடித்து அசத்தியுள்ளார்.
அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவில்லை. கடந்த சில மாதங்களாகவே இந்திய அணி இடதுகை வேகப்பந்துவீச்சாளரை தேடி வந்தது. அதற்கான போட்டியில் அர்ஷ்தீப் சிங், கலீல் அஹ்மத் மற்றும் யாஷ் தயாள் ஆகிய மூவரும் இருந்தனர். பலரும் அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, யாஷ் தயாள் தேர்வு செய்யப்பட்டுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஆகாஷ் தீப்-க்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. துலீப் டிராபி தொடரின் முதல் போட்டியில் ஆகாஷ் தீப் 9 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதேபோல் 21 மாதங்களுக்கு பின் நட்சத்திர விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு கம்பேக் கொடுத்துள்ளார்.
அதேபோல் பேக் அப் விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் தேர்வாகியிருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. ஏனென்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துருவ் ஜுரெல் மிகச்சிறந்த ஆட்டத்தை அழுத்தமான சூழலில் வெளிப்படுத்தினார். துலீப் டிராபி தொடரின் முதல் சுற்றுப் போட்டிகள் முடிவடைந்த நாளிலேயே இந்திய அணி அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி : ரோஹித் சர்மா, சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, கேஎல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட், துருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரிட் பும்ரா, ஆகாஷ் தீப், யாஷ் தயாள்