மும்பை: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இளம் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தயாள் இடம்பிடித்து அசத்தியுள்ளார். துலீப் டிராபி தொடரில் அசத்தலாக செயல்பட்ட யாஷ் தயாள், நேரடியாக இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி விளையாடிய ஆட்டத்தை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது. ஏனென்றால் கேகேஆர் அணி வெற்றிபெற கடைசி 6 பந்தில் 29 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது குஜராத் அணி சார்பாக கடைசி ஓவரை வீச யாஷ் தயாள் அழைக்கப்பட்டார்.

அப்போது முதல் பந்தில் உமேஷ் யாதவ் ஒரு ரன் எடுத்து மறுமுனைக்கு வந்த பின், ரிங்கு சிங் ஸ்ட்ரைக்கில் வந்தார். அடுத்த 5 பந்துகளில் 5 சிக்சர்களை விளாசிய ரிங்கு சிங், கேகேஆர் அணியை வெற்றிபெற வைத்து புதிய வரலாற்றை படைத்தார். அப்போது கேகேஆர் அணி ஓய்வறையை நோக்கி ரிங்கு சிங் உற்சாகத்தோடு ஓடிய போது, மறுபக்கம் யாஷ் தயாள் கண்ணீருடன் மைதானத்தில் நின்றிருந்தார்.
இதனால் ரசிகர்களின் கேளிக்கும் கிண்டலுக்கும் யாஷ் தயாள் ஆளானார். அந்த போட்டிக்கு பின் குஜராத் அணியில் இருந்து யாஷ் தயாள் நீக்கப்பட்டதோடு, உடல்நிலை அளவிலும் பின்னடைவை சந்தித்தார். காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சுமார் 5 கிலோ வரை 7 கிலோ வரை எடை குறைந்தார். இதன்பின் குஜராத் அணியில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்ட யாஷ் தயாளை, ஆர்சிபி அணி ஏலத்தில் வாங்கியது.
ஆர்சிபி அணி வைத்த நம்பிக்கைக்கு ஏற்ப யாஷ் தயாள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 13 போட்டிகளில் விளையாடிய யாஷ் தயாள், 15 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதுமட்டுமல்லாமல் ஆர்சிபி அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். அதுமட்டுமல்லாமல் தோனியை களத்தில் வைத்தே டிஃபெண்ட் செய்தது யாஷ் தயாளின் மரண மாஸ் கம்பேக்காக அமைந்தது.
இதனால் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தயாள் விரைவில் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் யாஷ் தயாளுக்கு முன்பாக இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங் மற்றும் கலீல் அஹ்மத் இருவரும் இடம்பிடித்திருந்தனர். இதனால் யாஷ் தயாளுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் துலீப் டிராபி தொடரில் இந்திய பி அணிக்காக விளையாட யாஷ் தயாள் தேர்வு செய்யப்பட்டிருந்தார். முதல் போட்டியில் 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி இருந்தாலும், யாஷ் தயாளின் லைன் மற்றும் லெந்த் பலராலும் கவனிக்கப்பட்டது. ஏனென்றால் புதிய பந்தில் ஸ்விங் செய்வதோடு, பழைய பந்தில் ரிவர்ஸ் ஸ்விங்கையும் செய்து அசத்தினார்.
26 வயதாகும் யாஷ் தயாள் இந்தியா ஏ அணியுடன் நீண்ட காலம் பயணித்துள்ளார். அதேபோல் யாஷ் தயாளின் லைன் மற்றும் லெந்த் சாதாரணமாகவே டெஸ்ட் போட்டிக்காக அமைந்திருப்பது கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. வேகம், பவுன்ஸ், ஸ்விங் மற்றும் யார்க்கர் பந்துகள் என்று வெரைட்டியும் இருப்பதால், வங்கதேச தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு முன்பாக இந்திய அணி இடதுகை வேகப்பந்துவீச்சாளரை தயார் செய்ய வேண்டிய பொறுப்புள்ளது. இதனால் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே யாஷ் தயாளுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வாய்ப்பை யாஷ் தயாள் பயன்படுத்தி கொள்ளும் பட்சத்தில், நிச்சயம் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கு விமானம் ஏறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.